எடையார்பாக்கம் மகாதேவர் கோவில்ரூ.33 லட்சத்தில் புனரமைப்பு
ஸ்ரீபெரும்புதூர்: எடையார்பாக்கம் மகாதேவர் கோவிலில், 33 லட்சம் ரூபாய் செலவில், பூங்கா, சுற்றுச்சுவர், கோவில் கட்டடம் சீரமைப்பு பணி நிறைவு பெற்றுள்ளது. ஸ்ரீபெரும்புதூர் வட்டத்திற்கு உட்பட்டது எடையார்பாக்கம் கிராமம். இங்குள்ள ஏரியின் மேற்கு பகுதியில், பழமை வாய்ந்த மகாதேவர் கோவில் உள்ளது. சிதிலம்அடைந்து காணப்பட்ட இக்கோவிலை, சமீபத்தில், காஞ்சிபுரம் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, அங்கிருந்த கல்வெட்டுகளில், இவ்வூர் இடையாற்றுபாக்கம் என்கிற இராஜவித்யாதர சதுர்வேதி மங்கலம் என்று அழைக்கப்பட்டதாகவும், முதலாம் குலோத்துங்கன் காலத்தில், கி.பி. 11ம் நூற்றாண்டில், தூங்காணை மாட வடிவில், இக்கோவில் கட்டப்பட்டது தெரியவந்தது. இக்கோவிலில், திருப்பாதகாடுடையார் மகாதேவர் கருவுறையில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்துவந்துள்ளார். எனவே, வரலாற்று சிறப்பு மிக்க இக்கோவிலை சீரமைக்க, இந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்தது. அதன்படி, 33 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, அதில், சுற்று சுவர், கோவிலை சுற்றி பூங்கா, பக்தர்களின் வசதிக்காக நடைபாதை, சிதிலமடைந்த கோவில் சுவர்கள் சீரமைப்பு பணி துவங்கியது. தற்போது பணிகள் நிறைவடைந்துள்ளன. கோவிலில், ஒவ்வொரு பிரதோஷ காலங்களில் சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைப்பெறுகின்றன. சுற்றுவட்டார கிராம மக்கள், கலந்து கொண்டு, வழிபடுகின்றனர்.