உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஏழுமலையான் பகுதி-24

ஏழுமலையான் பகுதி-24

இதற்குள் சீனிவாசனுக்கும், பத்மாவதிக்கும் திருமணமாகி ஆறு மாதங்கள் கடந்து விடவே அவர்கள் அகஸ்தியரின் ஆஸ்ரமத்தில் இருந்து (சீனிவாசமங்காபுரம்) கிளம்பினர். தொண்டைமானால் எழுப்பப் பட்ட இருப்பிடத்தில் அவர்கள் தங்கினர். அப்போது கலக முனிவரான நாரதர் வைகுண்டத்தில் லட்சுமியை சந்தித்தார். தன் தாயிடம் ஆசி பெற்றார். பின்னர், ஒரு கலகத்தை ஆரம்பித்து வைத்தார். லட்சுமி! நீ நன்றாக ஏமாந்துவிட்டாய். உன் கணவர் சீனிவாசன் பூலோகத்தில் பத்மாவதி என்ற பெண்ணை மணந்துகொண்டார். நீ உடனே பூலோகம் சென்று சேஷாசலத்தில் தங்கியுள்ள அவரை தட்டிக்கேள், என்று சொல்லிவிட்டு அகன்றுவிட்டார். லட்சுமிக்கு கடும் கோபம் ஏற்பட்டது. சீனிவாசனை சந்தித்து பிரச்னையை துவங்கிவிட்டாள். என்னை மணந்துவிட்டு, பத்மாவதியை இரண்டாம் தாரமாக ஏமாற்றி மணந்திருக்கிறீர்களே! இது எந்த வகையில் நியாயம்? என படபடவென பொரிந்தாள். சீனிவாசன் அவளைத் தேற்றினார். லட்சுமி! நீயே பத்மாவதியாக மானிடப் பிறவி எடுத்துள்ளாய். பழைய நினைவுகளை நீ மறந்துவிட்டாயா? அந்த கதையை சொல்கிறேன் கேள். ராமாவதார காலத்தில் நீ சீதையாக பிறந்தாய். நாம் கானகத்திற்கு செல்லவேண்டிய நிலைமை ஏற்பட்டது. அப்போது ராவணன் என்ற அசுரன் உன் மீது ஆசைகொண்டு உன்னைத் தூக்கிச்செல்ல முயன்றான். அப்போது அக்னிபகவான் உன்னைப்போலவே உருவம் கொண்ட மற்றொரு பெண்ணை படைத்தான். அவளை நீ தங்கியிருந்த குடிசையில் வைத்துவிட்டு, உன்னை காப்பாற்றி சென்றான். நீ வேதவதி என்ற பெயரில் அங்கு தங்கியிருந்தாய். உங்கள் உருவ ஒற்றுமையை பார்த்த ராவணன் உன்னை கடத்தி சென்றுவிட்டான். அவனிடமிருந்து நான் உன்னை மீட்டேன். அப்போது நீ என்னிடம் திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டாய். ராமாவதார காலத்தில் நான் ஏகபத்தினி விரதம் அனுஷ்டித்தேன்.

எனவே அப்போது உன்னை மணக்க முடியவில்லை. ஆனால் நான் உனக்கு ஒரு வாக்கு கொடுத்தேன். கலியுகத்தில் நான் சீனிவாசனாக சேஷாசலத்தில் அவதரிக்கும் போது, நீ பத்மாவதியாக பிறந்து என்னை அடைவாய் என்பதே அந்த உறுதிமொழி. அதன்படியே இப்போது நீ என்னை அடைந்தாய், என்று விளக்கமளித்தார். இதைக்கேட்ட லட்சுமி சாந்தமடைந்தாள். பத்மாவதியை மார்போடு அணைத்துக்கொண்டு நாம் இருவரும் இனி சீனிவாசனின் மார்பில் இடம்பிடிப்போம் எனக்கூறி அவரது மார்பில் ஐக்கியமாயினர். பத்மாவதி இடது மார்பிலும் லட்சுமி வலது மார்பிலும் அமர்ந்துகொண்டனர். சீனிவாசன் லட்சுமியிடம், நான் எனது திருமணத்திற்காக குபேரனிடம் கடன் வாங்கியுள்ளேன். இதற்குரிய வட்டியை மட்டும் கலியுகம் வரையில் செலுத்துவதாக உறுதிமொழி பத்திரம் கொடுத்திருக்கிறேன். அந்த வட்டியை எப்படி செலுத்துவது என்கிற வழிமுறையையும் நான் உனக்கு சொல்கிறேன். என்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு உன் அருள் கடாட்சம் படவேண்டும். பொதுவாகவே இங்கு வரும் அனைவருமே செல்வம் வேண்டியே வருவார்கள். அவர்களின் தகுதிக்கு ஏற்ப நீ செல்வத்தை கொடு. அந்த செல்வத்தை பெறும் பக்தர்கள் ஆணவம் காரணமாக தறிகெட்டு அலைவார்கள். ஏராளமான பாவ கர்மாக்களை செய்வார்கள். பெரும் ஆபத்துகளை சந்திப்பார்கள். அப்போது என்னை நினைப்பார்கள். நான் அவர்களது கனவில் தோன்றி, வட்டிக்காசு, தேவையில்லாமல் கையிலிருக்கும் பணம் ஆகியவற்றை எடைக்கு எடை சமர்ப்பித்தல், உண்டியலில் இடுதல் ஆகியவற்றின் மூலம் சேர்த்துவிடுமாறு கூறுவேன். நீ ஒரு ஏழைக்கு பணம் கொடுத்தால்கூட அதை அவன் தவறான வழியில் செலவிடுவான் என்றால் அவர்களிடம் முடி காணிக்கையாக பெற்றுவிடுவேன். அதில் சேரும் பணத்தை குபேரனுக்கு செலுத்திவிடுவேன்.

கலியுகம் முடியும் வரையே நமக்கு இங்கு வேலை. அதன்பிறகு அசலை அடைத்துவிட்டு நாம் வைகுண்டம் சென்றுவிடலாம். நீ இனிமேல் என் மார்பில் தங்குவதில் உனக்கு எந்த தடையும் இருக்காது. பிருகு முனிவரால் மிதிக்கப்பட்ட என் மார்பு இப்போது பவித்திரமாகிவிட்டது. ஆகையால் உன் இடத்தில் நீ தாராளமாக வசிக்கலாம், என கூறி ஆசீர்வதித்தார். பின்னர் பத்மாவதியிடம், நீயும் லட்சுமிதான். இங்கிருந்து சற்று தூரத்தில் பத்மசரோவர் என்ற ஏரி இருக்கிறது. அந்த ஏரிக்கரையில் நீ வசிப்பாயாக. அங்கு வரும் பக்தர்களுக்கு செல்வத்தை வாரி வழங்குவாயாக! உன்னை அலமேலு என்று மக்கள் அழைப்பார்கள். அலமேலு என்றால் வாரி வழங்குபவள் என பொருள். உன் இருப்பிடம் அலமேலுமங்காபுரம் என அழைக்கப்படும். இங்கே வரும் பக்தர்கள் முதலில் உன்னை தரிசித்த பிறகே என்னை தரிசிக்க வரவேண்டும் என ஆணையிடுகிறேன். உனக்காக விஸ்வகர்மா பத்மசரோவர் ஏரிக்கரையில் ஒரு கோயில் நிர்ணயித்து உள்ளார். அங்கு சென்று நீ தங்குவாயாக! என்றார். பத்மாவதியும் அவரிடம் விடைபெற்று அலமேலுமங்காபுரம் சென்றாள். கோயிலுக்குள் சென்று சிலை ரூபமானாள். சீனிவாசனும் லட்சுமியும் சேஷாசலத்தில் தொண்டைமானால் எழுப்பப்பட்ட கோயிலுக்குள் சென்று சிலை வடிவமாயினர். இத்தனை விஷயமும் வகுளாதேவிக்கு தெரியாமல் போய்விட்டது. தன் மகன் சீனிவாசனும் மருமகள் பத்மாவதியும் இன்னும் வீடு வந்து சேரவில்லையே என அவள் கவலைப்பட்டாள். தனது மூத்த மகன் கோவிந்தராஜனிடம் சென்று, மகனே! சீனிவாசனையும் பத்மாவதியையும் அகத்தியரின் ஆஸ்ரமத்தில் விட்டு வந்தோமே! அவர்களை இதுவரை காணவில்லையே. ஆறு மாதங்கள் கடந்தும் ஏன் வராமல் இருக்கிறார்கள்? அவன் எங்கிருக்கிறான் என தேடிப் பிடித்து வா, என்றாள். கோவிந்தராஜன் அவளிடம் நடந்த விஷயங்களை எல்லாம் விளக்கினார். உன் மகன் சிலை வடிவமாகி விட்டான். பத்மாவதி பத்மசரோவர் கரைக்கு சென்றுவிட்டாள். லட்சுமிதேவி உன் மகனின் மார்பில் அடைக்கலம் புகுந்துவிட்டாள். நீ நம் வீட்டின் அருகில் உள்ள ஆனந்த நிலையத்திற்கு செல். அதன்கீழே உன் மகன் சிலையாக இருக்கிறான், என்றார். பதறிப்போன வகுளாதேவி ஆனந்த நிலையத் திற்குள் சென்று சிலையாக நின்ற தன் மகனைக்கண்டு கதறிக் கண்ணீர் வடித்தாள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !