இஸ்கான் கோயிலில் தாமோதர தீபத் திருவிழாதீப அலங்காரத்துடன் துவங்கியது!
மதுரை மணிநகரத்திலுள்ள இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோயிலில் ஒரு மாத கால தாமோதர தீபத் திருவிழா கடந்த வியாழக்கிழமை (அக்.18) துவங்கியது. விழாவினை இஸ்கான் மதுரை கிளையின் தலைவர் அருட்திரு.சங்கதாரி தாஸ் அவர்கள் துவக்கி வைத்தார். விழாவின் சிறப்பாக சன்னதி முழுவதும் நெய் தீபங்களால் அலங்கரிக்கப்பட்டு, ஸ்ரீராதா மதுராபதி தாமோதர தீப அலங்காரத்தில்’’ எழுந்தருளி அருள்பாலித்தார். பிறகு மாலை 6.30க்கு நடைபெறும் வழக்கமான பூஜைகளான, துளசி பூஜை மற்றும் சந்தியாக் கால பூஜையைத் தொடர்ந்து தாமோதர தீப ஆரத்தி நடந்தது. அச்சமயம் ஸ்ரீகிருஷ்ணருக்குப் பிரியமான தாமோதஷ்டக பாடல்கள் பாடப்பட்டன. பின்னர் பக்தர்கள், தங்கள் கரங்களால் நேரடியாக சுவாமிக்கு நெய் தீப ஆரத்தி காட்டினர். இது விழாவின் சிறப்பம்சமாக அமைந்தது. ஹரே கிருஷ்ண மஹாமந்திர ஜப தியானமும், நரசிம்ம பிரார்த்தனையும் நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற சிறப்புரையில் விளக்கம் அளிக்கப்பட்டதாவது, தாமோதரத் திருவிழா உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதன் மூலம் அனைத்து தரப்பு மக்களுக்கும் பகவானை நேரடியாக வழிபடுவதற்கான வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் அவர்களது மன அமைதிக்கு பெரிதும் இது உதவி புரிகிறது. இதில் ஜபதியானம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் அடங்குவதால் பங்கேற்போர் அனைவரும் பயன்பெறும் வகையில் உள்ளது. இந்நிகழ்ச்சியானது இஸ்கான் ஸ்தாபக ஆச்சாரியர் ஸ்வாமி ஸ்ரீலபிரபுபாதாவின் வழிகாட்டிய படி உலகம் முழுவதும் உள்ள இஸ்கான் கோயில்களில் நடைபெறுகிறது. இம்மாதத்தில் பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்கு தீப ஆரத்தி காட்டி, ஹரே கிருஷ்ண மஹாமந்திரத்தை ஜபம் செய்தால், மனஅமைதியும் மகிழ்ச்சியும் அடையலாம் என்று வேத சாஸ்திரங்கள் உறுதியளிக்கின்றன. விசேஷ திருநாட்களான அக்டோபர் 20, 27 நவ. 2, 3, 10, 17 தேதிகளில் தேதிகளில் சிறப்பு பூஜைகளும் நடைபெறும். வரும் நவ.17ம் தேதி வரை ஒருமாத காலம் தாமோதரத் திருவிழா நடைபெறும். என்று குறிப்பிடப்பட்டது.
விசேஷ நாட்கள் : அக்டோபர் 27 மற்றும் நவம்பர் 2, 3, 10, 17
சிறந்த நேரம்: மாலை 6.55 மணி முதல் இரவு 7.10 மணிக்குள்.
மக்கள் நலன் கருதி நிகழ்ச்சி ஏற்பாடு: மதுரை மக்கள் நலன் கருதி தாமோதர மாதம் முழுவதும் இந்த தாமோதர தீபத் திருவிழா, மதுரை.மணிநகரத்திலுள்ள இஸ்கான் - ஹரே கிருஷ்ணா கோயிலில் அனைவரும் பங்கேற்கும் வகையில் தினசரி மாலை 6.30 மணிக்கு தீபம் காட்டும் நிகழ்ச்சியும், சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் அனைவரும் தங்கள் கரங்களால் நேரடியாக பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்கு தீப ஆரத்தி காட்டி மன அமைதியும் மகிழ்ச்சியும் பெறலாம். மேலும் விழாவை முன்னிட்டு கோயில் சன்னதி முழுவதும் நெய் தீபங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
- இஸ்கான் - ஹரே கிருஷ்ணா கோயில், மதுரை.