பழனி கோயிலில் இன்று பரணி தீபம் நாளை திருக்கார்த்திகை
ADDED :4385 days ago
பழனி மலைக்கோயிலில் திருக்கார்த்திகைத் தீபத் திருவிழா கடந்த திங்கட்கிழமை காப்புக்கட்டுடன் துவங்கியது. தினமும் மாலை சண்முகார்ச்சனை, சண்முகர் தீபாராதனை, யாகசாலை தீபாராதனை மற்றும் தங்கரதப்புறப்பாடு நடைபெற்று வருகிறது. சனிக்கிழமை சாயரட்சை பூஜையின் போது பரணிதீபம் ஏற்றுதலும், ஏழாம் நாள் ஞாயிற்றுக்கிழமை திருக்கார்த்திகை தீபம் மற்றும் சொக்கப்பனை கொளுத்தலும் நடைபெறுகின்றன. ஞாயிற்றுக்கிழமை காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனமும், மாலை 4 மணிக்கு சாயரட்சை பூஜையும் நடைபெறும். பின்னர் மாலை 6 மணிக்கு திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு சொக்கப்பனை கொளுத்துதல் நடைபெறும்.