உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அண்ணாமலையார் கோவிலில் உத்தராயண புண்ணியகால உற்சவம்

அண்ணாமலையார் கோவிலில் உத்தராயண புண்ணியகால உற்சவம்

திருவண்ணாமலை: அண்ணாமலையார் கோவிலில், உத்தராயண புண்ணிய கால உற்சவ, 10 நாள் விழா, நேற்று, கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவிலில், ஆண்டுதோறும், மார்கழி மாதம், உத்தராயண புண்ணியகால உற்சவ விழா, 10 நாட்கள் நடப்படும். அதன்படி, அண்ணாமலையார் கோவிலில், உத்தராயண புண்ணிய கால கொடியேற்று விழா, நேற்று துவங்கியது. இதையொட்டி, காலை, 7:30 மணிக்கு, அண்ணாமலையார் கோவில் சன்னிதி முன், 63 அடி உயரமுள்ள, தங்கக் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. முன்னதாக, அதிகாலை, 3:00 மணிக்கு, நடை திறக்கப்பட்டு, அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, விநாயகர், அண்ணாமலையார், பராசக்தி அம்மன் ஆகியோர் மேளதாளம் முழங்க, கோவிலின் தங்கக் கொடிமரம் அருகே அமர வைக்கப்பட்டனர். பின், வேதமந்திரங்களை, சிவாச்சாரியார்கள் முழங்க, கொடியேற்றம் நடந்தது. கோவிலில் திரண்டிருந்த பக்தர்கள், அண்ணாமலையாருக்கு அரோகரா என்று பக்தி முழக்கமிட்டனர். விழாவையொட்டி, 10 நாட்கள், காலை, மாலை, இரு வேளையிலும், வீதிகளில், உற்சவர், பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இதன் நிறைவு நாளான, ஜனவரி, 14ம் தேதி, தாமரைக்குளத்தில், உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் தீர்த்தவாரி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !