அகத்திய மாமுனிவர் ஞானம் – முப்பது (பகுதி7)
அறிமுகவுரை: இது ஆறாவது பாடலாகும், இந்தப் பாடலில் ஒருவன் இறை சாதனையினை சரியாக புரிந்து செய்ய வேதாந்த சித்தாந்தம் அவசியமாயினும் அதனை குதர்க்கம் செய்து பேதம் காணக்கூடாது என்பதனையும், யோகசாதனையின் படிமுறையில் வரும் மேலும் சிலஅனுபவங்களைப்பற்றியும், அதனைக்கடந்து சிவத்தினை வாமபூசையாகியகுண்டலினி விழிப்பு மூலம் அடைவதற்கானவழிமுறைகளை குறிப்பாலும் அதனை சாதிக்கபிரணாயாமம் அவசியம் என்பதனையும், இவற்றை எல்லாம் நலமாகசெய்துமுடிக்கமனதினை கட்ட வேண்டும் என்றதன் அவசியத்தினையும் கூறுகிறார்.
இனி ஆறாவது பாடல் வருமாறு;
வேதாந்தசித்தாந்த மிரண்டுமென்ன
மேன்மையுள்ள பெரியேர்க்கு மெல்லாமொன்றே
நாதாந்த நடனவொளி கண்டபேர்க்கு
நானென்றவகம் போச்சு யெல்லாம் போச்சே
போதாந்தம் பொக்கிசமாம் வாமபூசை
பூசித்துக்கும்பித்து வுள்ளே ரேசி
கீதாந்த வொளியேழும் நாதங் கேட்கும்
கிருபை தருமுனற்றிய மனத்தைக்கட்டே 6
பொருளுரை: வேதாந்தசித்தாந்த மிரண்டுமென்ன: வேதாந்தம் ஆதிசங்கரரால் அத்வைதமாக நிலைநாட்டப்பட்டது, பொதுவால மூல நூற்கள் சமஸ்கிருதத்தில் உள்ளது, சித்தாந்தம் சிவனை முதன்மையான கடவுள் என நிறுவி தமிழினை மூலமாக கொண்டது, காஷ்மீர சைவமும் சைவ சித்தாந்தமும் நெருங்கிய தொடர்புடையவை, காஷ்மீர சைவத்தின் திரிக தத்துவமும், சைவ சித்தாந்த தத்துவமும் பல ஒருமை உடையவை; சைவ சித்தாந்தம் கூறும் பதி, பசு, பாசம் எனற மூன்றையும் காஷ்மீர சைவம் பைரவா (சிவன்) மாயா (சக்தி) ஆன்மா என மூன்றாக கூறும், சிவன் நிலை சக்தி, சக்தி சிவனின் பாகமான இயக்க சக்தி, ஆன்மா சக்தியினை அடைந்தே சிவனை அடைய முடியும் என்பது இதன் சுருக்கமான விளக்கமாகும். ஆகவே சிவனை அடைய விரும்புபவர்கள் முதலில் சக்தியினை அடைதல் வேண்டும், இந்த சக்தியினையே வேதாந்தம் மாயை எனக் கூறும், சிவத்தினை பிரம்மம் எனக்கூறும். மாயயை வெல்ல மஹாமாயாவான சக்தியின் அருள் வேண்டும், ஆக வேதாந்தம் சித்தாந்தம் இரண்டின் அடைப்படை புரிந்து அதன் தொடர்வுகள் விளங்கியவர்களுக்கே சரியான பாதை புலப்படும். அப்படிப் புரியாதவர்கள் தமது மார்க்கமே சரியானது என வாதிட்டு திரிவர், அது சரியல்ல என்பதற்காகவே முதற்பாடலில் வேதாந்தம் சித்தாந்தம் இரண்டையும் பார், ஆனால் அவற்றை உனது அகங்கார மனதால் குழப்பிக்கொள்ளாதே என்பதற்காக அடுத்த வரியில் கூறுகிறார்.
மேன்மையுள்ள பெரியேர்க்கு மெல்லாமொன்றே: மேன்மையுள்ள பெரியோர் என்றால் குருகாட்டிய வழியில் நின்று சாதனை புரிந்த சாதகன், வேதாந்தம் சித்தாந்தம் இரண்டின் அடிப்படைகளை புரிந்து அவற்றின் மூலம் தனது சாதனையினை சரியான வழியில் சென்றவன், அத்தகையவனுக்கு இரண்டும் ஒன்றே என்கிறார், இது எப்படி வேதாந்தம் பிரம்மம், ஆன்மா, மாயை என அடிப்படையினை விவரிக்கிறது, இந்த ஆன்மாவினை சூழ உள்ள பஞ்ச கோசங்களின் செயல்முறை சுத்திகளை விவரிக்கிறது, சித்தாந்தம் அதே பிரம்மத்தினை சிவம் என்கிறது, மாயையினை மலம் என்கிறது. ஆக இரண்டும் ஒரே விடயத்தினை வெவ்வேறு பரிமாணங்களில் ஆராய்கிறது, சாதனை செய்து தன்னை அறிந்து தலைவனை அறிய விரும்பும் சாதகன் தர்க்க சாத்திர புலமையினால் ஆராயாமல் இவற்றின் சாரம் என்ன நோக்கத்திற்காக சொல்லப்படுகின்றது என்பதனை உணர்ந்து தனது சாதனையினை தொடரவேண்டும்.
நாதாந்த நடனவொளி கண்டபேர்க்கு: யோக சாதனை புரிபவர்களுக்கு உண்டாகும் அனுபவங்களில் நாதம் கேட்டல் முதன்மையாக வரும் அதன் பின்னர் ஒளிகாணும் ஆற்றம் வரும். இந்த அனுபவத்தினை திருமூலர் பெருமான் மூன்றாந் தந்திரம், எட்டாம் அத்தியாயம், தியானம் இல் விரிவாக கூறுகிறார்;
மணி கடல் யானை வார் குழல் மேகம்
அணி வண்டு தும்பி வளை பேரிகை யாழ்
தணிந்து எழு நாதங்கள் தாம் இவை பத்தும்
பணிந்தவர்க்கு அல்லது பார்க்க ஒண்ணாதே. (586)
மணி, கடல், யானை, புல்லாங்குழல், மேகம், வண்டு, தும்பி, சங்கு, பேரிகை, யாழ் போன்ற பத்துவகை ஓசைகள் யோகியின் அகத்தில் ஒலிக்கும்.
இதன் இறுதியில் வரும் அனுபவத்தினை இன்னொரு பாடலில் கூறுகிறார்;
நாத முடிவிலே நல்லாள் இருப்பது
நாத முடிவிலே நல் யோகம் இருப்பது
நாத முடிவிலே நாட்டம் இருப்பது
நாத முடிவிலே நஞ்சு உண்ட கண்டனே. (589)
இந்த அனுபவங்களின் முடிவிலேயே சாதகன் பராசக்தியினை (நல்லாள்) உணருகின்றான், இந்த அனுபவங்களின் முடிவிலேயே உண்மையான யோகம் (நல்யோகம்) சித்திப்பதும், இந்த அனுபவங்களின் முடிவிலேயே ஒருவன் நிலையான சித்தியினை அடைவதும் அல்லது சிவமாகிய பரம்பொருளினை அடைய வேண்டும் என்ற விருப்பு வருவதும்(நாட்டம் என்றால் ஞுண்tச்ஞடூடிண்டடிணஞ்) என்றும் பொருள் கொள்ளலாம், இந்த நாத முடிவிலேயே சிவத்தினை அறிவதும் என்பதனை விளக்குகிறார், இந்த நிலையினை அடைபவர்கள் எப்படி இருப்பார்கள் என்பதனை அடுத்த வரியில் விளக்குகிறார் குருநாதர்.
நானென்றவகம் போச்சு யெல்லாம் போச்சே: மேற்குறிப்பிட்டஅனுபவத்தினை அடைந்து அதனை கடந்தசாதகனுக்கு நான் என்றபந்தப்படுத்தும் அகங்காரம் போய் நானே சிவம் எனும் நிலையினை அடைகிறான். எல்லாம் போச்சே என்பது புலம்பல் தொனியல்ல! எமது மாயைகளை கடந்து நான் சிவம் என்று உணர்ந்தநிலை!
போதாந்தம் பொக்கிசமாம் வாமபூசை: போது என்றால் மலர் எனப்பொருள், எமது சூஷ்ம உடல் சக்கரங்கள் தாமரை மலர்களாவே உருவகப்படுத்தப்படுகிறது. இப்படி ஆறு மலர்கள் ஸ்தூல உடலில் உள்ளது, ஏழாவது மலர் சக்கரங்களின் முடிவு, அதுவே போதாந்தம், இதையே போதாந்தம் என்பர்; இந்தசகஸ்ராரத்தில் குண்டலினியானசக்தி சிவனுடன் கூடுகின்றாள், அவளே வாமா எனப்படுபவள்; குண்டலினியானவாமாவினை எழுப்பி சக்கரங்களினூடாககொண்டுவந்து சிவத்துடன் ஒன்றறகலக்கும் முறை வாமபூசை! இது பலபடிகளை உடையது, தாந்திரீகமுறை சார்ந்தது; குருமுகமாய் கற்க வேண்டியது.
பூசித்துக்கும்பித்து வுள்ளே ரேசி: வாமபூசை எனும் குண்டலினி விழிப்பிற்கு பிரணாயாமம் அவசியம், பிரணாயாமத்தின் அங்கங்கள் பூரகம், கும்பகம், ரேசகம் வாமபூசையாகியகுண்டலினி விழிப்பில் பிரணாயாமாத்தின் பங்கு அவசியம் என்பதனை வலியுறுத்தஇந்தவரிகளை கூறுகிறார். இதன் செயல்முறை விளக்கம் அடுத்துவரும் பாடல்களில் விரிவாககூறியுள்ளார், அங்கு இதுபற்றி விரிவாகஆராய்வோம்.
கீதாந்த வொளியேழும் நாதங் கேட்கும்: பிரணாயாமபயிற்சியால் நாதம் கேட்கும் தன்மை உண்டாகும் என்பதினை காட்டஇந்தவரியினை கூறுகிறார். கீதாந்தஒளி ஏழும் என்பது ஏழுசக்கரங்களும் விழிப்படைவதால் உண்டாகும் ஒளி, சாதாரணமனிதர்களை விடசூட்சுமஉடலில் சக்கரங்களை விழிப்படையவைத்தவர்களுக்கு வெளிப்படும் ஒளி, கீதம் என்பது மேலே கூறப்பட்ட முறையில் பிரணாயாமத்தால் வாமபூசை எனும் குண்டலினியை எழுப்பி சகஸ்ராரத்தில் கலந்த யோகிக்கு ஏழுசக்கரங்களும் விழிப்படைந்தது ஒளிபிரகாசிக்கும், அதேவேளை அந்தந்த சக்கரங்களுக்குரிய ஒலியினையும் அறியும் தன்மை அடைவான். எமது சக்கரங்களில் உள்ள ஒவ்வொரு இதழும் விழிப்படையும் போது சாதகன் அந்த ஒலியினை உணரும் தன்மை பெறுவான். இதுவே மாத்ருகா அட்சரங்கள் எனகூறப்பட்டுள்ளது.
கிருபை தருமுனற்றிய மனத்தைக்கட்டே (கிருபை தரும் உன் நற்றிய மனதை கட்டே): மேலே கூறப்பட்டஅனைத்து அனுபவங்களையும் பெறுவதற்கு சாதகன் கடைப்பிடிக்கவேண்டியமுதன்மை நிபந்தனையினை கடைசி வரியில் ஆணித்தரமாககூறுகிறார். கிருபை தரும்: இத்தனை கிருபைகளையும் தரும் உனது நற்றியமனதினை சரியானவிதத்தில் அறிந்து பயன்படுத்தே என்பதாகும். கட்டு என்பதன் பொருள் சித்தர் பரிபாடலில் பயன்படாமல் இருக்கு ஒரு சக்தியினை உருமாற்றி பயனுள்ளதாக்கும் செயல் முறையினை குறிக்கும் அன்றி கட்டி வைத்தல் எனும் பொருளினை குறிக்காது. இது பற்றி விரிவாகஅடுத்து வரும் பாடல்களில் பார்ப்போம்.
சித்த வித்யா விளக்கவுரை: ஒரு சாதகன் மற்றைய அனைத்து விஞ்ஞானங்கள் போல் சாதனா பாதையிலும் தகுந்த கோட்பாட்டறிவு பெற்றிருத்தல் அவசியம் என்பதற்காக சென்ற பாடலில் கூறிய குருதேவர், இந்த பாடலில் அதனை வைத்துக்கோண்டு குதர்க்கம் செய்து இன்பம் கண்டு மாயையில் சிக்க வேண்டாம் என எச்சரிக்கிறார்.
பின்பு குண்டலினி விழிப்பால் விழிப்புணர்வு நிலை அடையும் போது ஏற்படும் இடை நிலை அனுபவங்களில் நின்று விடாமல் மேலே சகஸ்ராரம் வரை சென்று முழுமை அடைய வேண்டும் என்பதனை வலியுறுத்துகிறார்.
இந்த செயல்முறையில் பிரணாயாமம் முக்கியத்துவம் பெறுகின்றது என்பதனையும் வலியுறுத்துகிறார். இறுதியாக இவை அனைத்திற்கும் மனதினை கட்டுவது அவசியம் என்பதனை மேலும் வலியுறுத்துகிறார்
நன்றி: சுமனன் – சித்த வித்யா விஞ்ஞானம்