உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெண்கள் மீது பூசாரி நடந்து செல்லும் சடங்கு: தடையை மீறியதால் பரபரப்பு!

பெண்கள் மீது பூசாரி நடந்து செல்லும் சடங்கு: தடையை மீறியதால் பரபரப்பு!

பெ.நா.பாளையம்: சிவராத்திரி விழாவில் போலீஸ் தடையை மீறி, பெண் பக்தர்கள் மீது ஆணிகள் பதிக்கப்பட்ட செருப்புடன் பூசாரி நடந்து சென்றதால், பரபரப்பு ஏற்பட்டது. கோவை அருகே பூச்சியூரில், மகாலட்சுமி, வீரபத்திரர்- தொட்டம்மாள், வேட்டைக்காரசாமி கோவிலில், ஆண்டுதோறும், சிவராத்திரி சிறப்பு பூஜை, வெகு விமரிசையாக நடப்பது வழக்கம். இதில், வேட்டைக்கார சுவாமி ஊர்வலத்தில், ஆணிகள் பதிக்கப்பட்ட செருப்புடன், பூசாரி நடந்து வருவார். அப்போது, தங்கள் வேண்டுதல் நிறைவேற பெண் பக்தர்கள், தரையில் குப்புறப் படுத்துக் கொள்வர். இவர்கள் மீது பூசாரி நடந்து செல்வார். இச்செயலுக்கு மனித உரிமை அமைப்புகள் மற்றும் பல்வேறு பெண்கள் நலச் சங்கங்கத்தினர், எதிர்ப்பு தெரிவித்ததால், 10 ஆண்டுகளுக்கு முன், பெண் பக்தர்கள் மீது பூசாரி நடந்து செல்லும் சடங்கிற்கு, தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், சிவராத்திரி விழாவையொட்டி நேற்று காலை, வேட்டைக்கார சாமி ஊர்வலம் நடந்தது. ஆணிகள் பதிக்கப்பட்ட செருப்புடன், பூசாரி சுப்பையா நடந்து வந்தார். அப்போது, பெண் பக்தர்கள் சிலர், திடீரென தரையில் படுத்தனர். அவர்கள் மீது பூசாரி நடந்து சென்றார். கடந்த, 10 ஆண்டுகளாக தடை விதிக்கப்பட்டிருந்த சடங்கு, நேற்று மீண்டும் நடந்ததால், பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் கண்காணித்திருந்தால், இச்செயலை தடுத்திருக்கலாம் என, பக்தர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !