திருநின்றவூரில் புதிய தேர் வெள்ளோட்டம்: பக்தர்கள் பரவசம்!
ADDED :4535 days ago
ஆவடி : திருநின்றவூர், பக்தவத்சல பெருமாள் கோவிலில், புதிய தேர் வெள்ளோட்டம் நேற்று கோலாகலமாக நடந்தது. திருநின்றவூரில், இந்து சமய அறநிலைய துறைக்கு சொந்தமான, பக்தவத்சல பெருமாள் கோவிலில், புதிய தேர் வெள்ளோட்டம், நேற்று காலை, 10:00 மணிக்கு நடைபெற்றது. கோவில் அறங்காவலர், சடகோப ராமானுஜ பெரிய ஜீயர் சுவாமிகள், வெள்ளோட்டத்தை துவக்கி வைத்தார். ஸ்ரீவைஷ்ணவ ஆகம முறைப்படி, 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில், தேக்கு மரத்தால் உருவாக்கப்பட்ட, 45 அடி உயரம் கொண்ட தேர், கோவில் வளாகத்தில் இருந்து புறப்பட்டு, ராஜவீதி வழியாக வந்து, மீண்டும் கோவிலை அடைந்தது. இதில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, கோவிந்தா, கோவிந்தா என, கோஷம் எழுப்பி பரவசம் அடைந்தனர்.