உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அவிநாசி மாரியம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலம்!

அவிநாசி மாரியம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலம்!

அவிநாசி : கருவலூர் மாரியம்மன் கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல், பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர். திருப்பூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் கோவிலான, கருவலூர் மாரியம்மன் கோவிலில், பங்குனி தேர்த்திருவிழா, கடந்த 15ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலை, மாரியம்மன், சிறப்பு அலங்காரத்தில், தேருக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை 3.30 மணிக்கு, விநாயகர் தேரோட்டம் நடந்தது. 4.30 மணிக்கு, அம்மன் தேரோட்ட நிகழ்ச்சி துவங்கியது. பேரூராதீன இளைய பட்டம் மருதாசல அடிகள், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமி, அவிநாசி வாகீசர் மடாலய ஆதீனம் காமாட்சிதாச சுவாமி, தாசில்தார் தேவமனோகரன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வடம் பிடித்து துவக்கி வைத்தனர். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல், பக்தர்கள், தேரை வடம் பிடித்து இழுத்தனர். கொறட்டு வாசல் வரை சென்ற தேர் நிறுத்தப்பட்டது. மீண்டும் தேரோட்டம் இன்றும், நாளையும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, செயல் அலுவலர் சரவணபவன், அறங்காவலர் குழு தலைவர் அர்ச்சுணன், அறங்காவலர்கள் தமிழ்செல்வன், ரங்கசாமி, லோகநாதன் ஆகியோர் மேற்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !