காஞ்சி யதோக்தகாரி பெருமாள் கோவில் கருட சேவை!
ADDED :4375 days ago
காஞ்சிபுரம்: யதோக்தகாரி பெருமாள் கோவிலில், கருடசேவை நேற்று நடந்தது. சின்ன காஞ்சிபுரம் நகர பகுதியில், சொன்ன வண்ணம் செய்த பெருமாள் கோவில் (யதோக்தகாரி) அமைந்துள்ளது. இங்கு, பங்குனி மாதத்தில் ஆண்டு பிரம்மோற்சவம் நடப்பது வழக்கம். இந்த ஆண்டிற்கான பங்கு மாத பிரம்மோற்சவம், கடந்த 23ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. மூன்றாம் நாளான நேற்று காலை 6:15 மணிக்கு, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கருட வாகனத்தில், யதோக்தகாரி பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, முக்கிய வீதிகளில் வீதியுலா சென்ற பெருமாள், காலை 10:30 மணிக்கு வாகன மண்டபத்திற்கு வந்தடைந்தார். அங்கு, சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. மாலை 6:30 மணிக்கு ஹனுமந்த வாகன உற்சவம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.