உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேளாங்கண்ணியில் புனித வெள்ளி வழிபாடு!

வேளாங்கண்ணியில் புனித வெள்ளி வழிபாடு!

நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி தேவாலயத்தில், புனித வெள்ளி வழிபாட்டில், பல்லாயிரம் பக்தர்கள் கலந்து கொண்டனர். வேளாங்கண்ணி, ஆரோக்கியமாதா தேவாலயத்தில், இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட தினமான, நேற்று, சிறப்பு திவ்ய நற்கருணை ஆராதனை நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று அதிகாலை, 5:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, அடைக்கல அன்னை அருட் சகோதரிகள், இருதயம் மரியாயின் சேனை, அன்னை தெரசா சபை, ஆங்கில திருப்பயணிகள், நிர்மல் இல்லத்தினர், டி.எம்.ஐ., சகோதரிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர், தொடர்ந்து ஆராதனை நடத்தினர். தேவாலய கலையரங்கில், மாலை 6:30 மணிக்கு, பேராலய அதிபர் மைக்கேல் உள்ளிட்ட, 10 பாதிரியார்கள் தலைமையில், இறை வழிபாடு, பொது மன்றாட்டு, சிலுவை ஆராதனை ஆகியவை நடந்தன. புனித வெள்ளியைத் தொடர்ந்து, இன்று புனித சனி துக்க நாள் கடைபிடிக்கப்படுகிறது. இதனால், பேராலய கோவில்களில் திருப்பலியோ, சடங்குகளோ நடைபெறாது. இரவு 10:45 மணிக்கு, பாஸ்கா திருவிழிப்பு சடங்கு நடக்கிறது. ஞாயிறன்று, இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினம், ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. அன்று, காலை 6:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை, தமிழ், மலையாளம், கொங்கணி, தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில், திருப்பலிகள் நடைபெறும். மாலை 6:45 மணிக்கு, உயிர்த்த இயேசு கிறிஸ்து தேர்பவனி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !