தமிழக முக்கிய கோயில்களில் பிரதோஷ நந்திக்கு சிறப்பு யாகம்
திருநெல்வேலி : நெல்லையப்பர் கோயில் உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய கோயில்களில் மழை வேண்டி நேற்று யாகம் நடத்தப்பட்டது. திருநெல்வேலிக்கு குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு தண்ணீர் வழங்கும் பாபநாசம் அணையில் நீர்மட்டம் 35 அடியாக குறைந்துவிட்டது. மொத்தம் 143 அடி உயரம் கொண்ட அணையில் கடந்த ஆண்டு இதே நாளில் நீர்மட்டம் 63 அடியாக இருந்தது. எனவே மழையில்லாமல் இதே நிலை தொடர்ந்தால், குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு பெரும் சிக்கல் ஏற்படும். எனவே அறநிலையத்துறையினர் மூலம் முக்கிய கோயில்களில் நேற்று காலை 5.55 மணிக்கு வருண ஜெபம் துவங்கியது. நெல்லையப்பர் கோயிலில் சுவாமி சன்னதிக்கு முன்பாக உள்ள பிரதோஷ நந்தியை சுற்றிலும் சுவர் எழுப்பி நந்தியின் கழுத்து அளவுக்கு தண்ணீர் நிரப்பப்பட்டது. கண்ணன் சாஸ்திரிகள் தலைமையில் 11 வேத விற்பன்னர்கள் மேற்கொண்டனர். அதே நேரத்தில் நெல்லை மற்றும் தூத்துக்குடி அரசு இசைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்று அமிர்த வர்ஷினி, மேக வர்ஷினி, ஆனந்த பைரவி, ரூப கல்யாணி ஆகிய ராகங்களில் பாடல்கள் இசைத்தனர். இதற்கான ஏற்பாடுகளை நெல்லையப்பர் கோயில் செயல்அலுவலர் யக்ஞ நாராயணன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.