உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மிஞ்சும் அதிசயம்!

மிஞ்சும் அதிசயம்!

புற அதிசயங்கள் அனைத்தையும் மிஞ்சும் அதிசயம் ஆகிய உயிர் உருவாதல் பற்றி இந்த அத்தியாயத்தில் காண்கிறோம்.

உடல், உயிர் (மனம்+பிராணன்), ஆன்மா ஆகியவற்றின் தொகுதியே மனிதன். தான் செய்த நல்வினை மற்றும் தீவினைப் பயன்களுக்கு ஏற்ப உடல்களை மாற்றியபடி செல்கின்ற உயிரின் பயணமே வாழ்க்கை. உயிர், பழைய உடலை விடுவது மரணம்; புதிய உடலை ஏற்றுக்கொள்வது பிறப்பு.

உடல் தாயிடமிருந்து கிடைக்கிறது. உயிர் தந்தையின் வழியாகத் தாயின் கருப்பைக்குள் புகுகிறது. இந்த உடல்+உயிர்ச்சேர்க்கையில் இறைவன் ஆன்மாவாகப் புகுந்து அதனை இயங்கச் செய்கிறார். உயிரின் இந்தப் பயணத்தைப் பற்றிய சில கருத்துக்களை இங்கே காண்கிறோம்.

கருத்தரித்தல்: முதற்பிறப்பு: 1-2

(அபக்ராமத (ந்து) கர்பிண்ய:)  புருஷே ஹ வா அயமாதிதோ கர்போ பவதி யதேதத்ரேத: ததேதத் ஸர்வேப்யோ ஸங்கேப்யஸ்- தேஜ: ஸம்பூதம் ஆத்மன்யேவாத்மானம் பிபர்த்தி தத்யதா ஸ்த்ரியாம் ஸிஞ்சதி அனதனஜ்ஜனயதி ததஸ்ய ப்ரதமம் ஜன்ம (1)

கர்பிண்ய:- கர்ப்பிணிகள்; அபக்ராமந்து- வெளியேறவும்; புருஷே ஹ ø வை- ஆணிடமே; அயம்- இந்த; ஆதித:- முதலில்; யத் ஏதத்- இந்த; ரேத:- விந்து; கர்ப: பவதி- குடிகொண்டிருந்தது; தத் ஏதத்- அது; ஸர்வேப்ய:- எல்லா; அங்கேப்ய:- உறுப்புக்களின்; தேஜ:- ஆற்றல்; ஸம்பூதம்- உருவானது; ஆத்மனி- தன்னில்; ஆத்மானம்- தன்னை; பிபர்த்தி- தாங்குகிறான்; தத்- அதனை; யதா- எப்போது; ஸ்த்ரியாம்- பெண்ணில்; ஸிஞ்சதி- விடுகிறானோ; அத- பிறகு; ஏனத்- அது; ஜனயதி- பிறப்பித்துக்கொள்கிறான்; தத்-அது; அஸ்ய- அவனது; ப்ரதமம்- முதல்; ஜன்ம- பிறப்பு.

1. (கர்ப்பிணிகள் வெளியேறவும்.) மனிதன் ஆரம்பத்தில் ஆணிடம் விந்துவாக இருக்கிறான். விந்து என்பது எல்லா உறுப்புக்களின் ஆற்றல் திரண்டு உருவாகியது. ஓர் ஆண் இவ்வாறு தன்னில் தன்னைத் (விந்து வடிவில்) தாங்குகிறான். விந்துவை எப்போது பெண்ணில் விடுகிறானோ அப்போது தன்னைக் (குழந்தையாகப் பிறப்பித்துக்கொள்கிறான். இது அவனது முதற்பிறப்பு.

இந்த மந்திரமும், இந்த அத்தியாயத்தில் தொடரும் மந்திரங்களும் உடலுறவு, கருத்தரித்தல் போன்ற கருத்துக்களைக் கூறுகின்றன. இதிலிருந்து சில உண்மைகளை நாம் அறிந்துகொள்கிறோம்.

1. கர்ப்பிணிகள் வெளியேறவும் என்று ஆரம்பத்தில் வருகிறது. எனவே அரச சபை, பண்டிதர் சபை போன்ற பொது இடங்களில் இந்தக் கருத்துக்கள் விவாதிக்கப்பட்டன என்பது தெரிகிறது.

2. இத்தகைய எல்லா விவாதங்களிலும் கருத்துப் பரிமாற்றங்களிலும் பெண்கள் கலந்துகொண்டார்கள் என்பது தெரிகிறது.

3. பண்டைய சமுதாயம் ஒரு சிறந்த, ஆரோக்கியமான சமுதாயமாக விளங்கியதற்கான முக்கியக் காரணங்களுள் ஒன்றை இங்கே காண்கிறோம். உடலுறவு, கருத்தரித்தல் போன்றவை சபைகளில் விவாதிக்கப்பட்டன. குருகுலத்தில் தகுந்த ஒருவரால் சிறுவயதிலேயே இவை கற்பிக்கப்படுவது பற்றி தைத்தீரிய உபநிஷதம் கூறுகிறது. உயிரை உருவாக்குகின்ற இந்த உறவை கீதை தெய்வீகமாகப் போற்றுவதும் இங்கு நினைவுகூரத் தக்கது.

இனவிருத்தி என்பது கடவுளின் மிகப் புனிதமான சின்னம்; கணவனும் மனைவியும் சேர்ந்து செய்கின்ற ஆழ்ந்த பிரார்த்தனை; நல்லதோ, தீயதோ செய்வதற்கான பெரும் சக்தி பெற்ற ஓர் உயிரை உலகிற்குக் கொண்டு வரப்போகின்ற பிரார்த்தனை. இது என்ன வேடிக்கையா? அல்லது வெறுமனே நரம்புகளுக்குத் திருப்தி அளிக்கின்ற செயலா? மிருகத்தனமான உடலின்ப அனுபவமா? இல்லை, இல்லை யென்று ஆயிரம் தடவை சொல்கிறான் இந்து என்கிறார் சுவாமி விவேகானந்தர்.

வாழ்க்கையின் அடிப்படை அம்சங்களான இவைபற்றி உரிய வேளையில், உரிய முறைப்படி சிந்திப்பதும் கற்பிப்பதும் செயல்படுவதும் நல்ல சமுதாயம் உருவாக வழிகோலுகின்றன.

1. அதாதிப்ரஜம் மாதா பூர்வ ரூபம் பிதோத்தரரூபம் ப்ரஜா ஸந்தி: ப்ரஜனனக்ம் ஸந்தானம் இத்யதிப்ரஜம்
    - தைத்திரீய உபநிஷதம், 1:3.6

2. ப்ரஜனச்சாஸ்மி கந்தர்ப்ப:- கீதை, 10.28.

3. ஞான தீபம், 8.148.

தத் ஸ்த்ரியா ஆத்மபூயம் கச்சதி யதா ஸ்வமங்கம் ததா தஸ்மாதேனாம் ந ஹினஸ்தி ஸாஸ்யைதம் ஆத்மானமத்ர கதம் பாவயதி (2)

தத்- அது; ஸ்த்ரியா:- பெண்ணிடம்; ஆத்மபூயம்- ஒன்றுபட்டதாக; கச்சதி- ஆகிறது; யதா- எப்படி; ஸ்வம் அங்கம்- சொந்த உறுப்பு; ததா- அப்படி; தஸ்மாத்- அதனால்; ஏனம்- அவளை; ந ஹினஸ்தி- துன்புறுத்துவதில்லை; ஸா- அவள்; அஸ்ய- அவனுடைய; ஏதம்- அதனை; அத்ர- அங்கே; கதம்- இருக்கின்ற; ஆத்மானம்- உயிரை; பாவயதி- பாதுகாக்கிறாள்.

2. உடலுக்குச் சொந்தமான ஓர் உறுப்புபோல்,
விந்து பெண்ணுடன் ஒன்றுபட்டுவிடுகிறது. அதனால்
அது அவளைத் துன்புறுத்துவதில்லை. விந்துவாகத்
தன்னில் புகுந்த உயிரை அவள் கருப்பையில் பாதுகாக்கிறாள்.

குழந்தை பிறப்பு: இரண்டாம் பிறப்பு

ஸா பாவயித்ரீ பாவயிதவ்யா பவதி தம் ஸ்த்ரீ கர்பம் பிபர்த்தி ஸோஸக்ர ஏவ குமாரம் ஜன்மனோ ஸக்ரேஸதி பாவயதி ஸ யத் குமாரம் ஜன்மனோ ஸக்ரேஸதி பாவயதி ஆத்மானமேவ தத்பாவயதி ஏஷாம் லோகானாம் ஸந்தத்யா ஏவம் ஸந்ததா ஹீமே லோகாஸ்ததஸ்ய த்வீதீயம் ஜன்ம (3)

ஸா- அவள்; பாவயித்ரீ- பாதுகாப்பவள்; பாவயிதவ்யா- பாதுகாக்கப்பட வேண்டியவள்; பவதி- ஆகிறாள்; தம்- அந்த; கர்பம்- கருவை; ஸ்த்ரீ- பெண்; பிபர்த்தி- சுமக்கிறாள்; ஸ:- அவன்; ஜன்மன:- பிறப்பதற்கு; அக்ரே- ஆரம்பத்தில்; குமாரம்- குழந்தையை; அதி- பிறகு; பாவயதி- பாதுகாக்கிறான்; ஸ:- அவன்; யத்- இந்த; குமாரம்- குழந்தையை; ஜன்மன:- பிறப்பதற்கு; அக்ரே- ஆரம்பத்திலும்; அதி- பிறகும்; ஆத்மானம் ஏன- தானாகவே; பாவயதி- பாதுகாக்கிறான்; தத்- எனவே; ஏஷாம்- இந்த; லோகானாம்- உயிர்களின்; ஸந்தத்யா- சந்ததிக்காக; ஏவம்- இவ்வாறு; இமே- இந்த; லோகா:- உலகங்களின்; ஸந்ததா: ஹி- தொடர்பு; தத்- அது; அஸ்ய- அவனது; த்விதீயம்- இரண்டாவது; ஜன்ம- பிறப்பு.

3. கருவைப் பாதுகாக்கின்ற பெண் பாதுகாக்கப்பட வேண்டியவள். (குழந்தை பிறக்குமுன்பு அதனைக் கருவாக பெண் பாதுகாக்கிறாள். பிறந்தபிறகு, ஆரம்பத்திலும் அதன்பிறகும் தந்தை பாதுகாக்கிறான். அந்தக் குழந்தையைத் தானாகவே எண்ணிப் பாதுகாக்கிறான் அவன். உயிர்களின் சந்ததிச் சங்கிலி தொடர்வதற்காகவே அவன் இவ்வாறு செய்கிறான். (இவ்வுலகம், மறுவுலகம் ஆகிய) உலகங்களின் தொடர்பு இவ்வாறு வளர்கிறது. (தாயின் வயிற்றிலிருந்து குழந்தையாகப்) பிறப்பது மனிதனின் இரண்டாம் பிறப்பு.

மரணம்: மூன்றாம் பிறப்பு:

ஸோஸஸ்யாயமாத்மா புண்யேப்ய: கர்மப்ய: ப்ரதிதீயதே அத அஸ்ய அயமிதர ஆத்மா க்ருதக்ருத்யோ வயோகத: ப்ரைதி ஸ இத: ப்ரயன்னேவ ததஸ்ய த்ருதீயம் ஜன்ம (4)

அஸ்ய- அவனது; பயம் - இந்த; ஸ: ஆத்மா- மகன்; புண்யேப்ய: கர்மப்ய: நற்செயல்களைச் செய்ய; ப்ரதிதீயதே- நியமிக்கப்படுகிறான்; அத- பிறகு; அஸ்ய- அவனது; இதர:- மற்ற; அயம்- இந்த; ஆத்மா- தந்தை; க்ருதக்ருத்ய:- செய்ய வேண்டியவற்றைச் செய்து; வயோகத:- வயதாகி; ப்ரைதி- போகிறான்; ஸ:- அவன்; இத:- இதிலிருந்து; ப்ரயன் ஏவ- வெளியேறியதும்; புன:- மீண்டும்; ஜாயதே- பிறக்கிறான்; அஸ்ய- அவனுக்கு; தத்- அது; த்ருதீயம்- மூன்றாவது; ஜன்ம- பிறப்பு.

4. ஒரு மனிதனின் மூன்று பிறப்புகளை 1-4 மந்திரங்கள் கூறுகின்றன. தந்தையிடமிருந்து தாயிடம் புகுந்து முதற்பிறப்பு. தாயிடமிருந்து உலகில் பிறந்தது இரண்டாம் பிறப்பு. இந்த உடம்பிலிருந்து வெளியேறி மீண்டும் பிறப்பது மூன்றாம் பிறப்பு.

மரணத்திற்குப் பிறகு நல்வினை மற்றும் தீவினைப் பயன்களை அனுபவிப்பதற்காக மறு உலகத்திற்குச் செல்வதையே மூன்றாம் பிறப்பாகக் கொள்ளலாம். அல்லது, மீண்டும் பூமியில் பிறப்பதை மூன்றாம் பிறப்பாகக் கருதலாம்.

தந்தையே மகனாகப் பிறக்கிறான். மகனைத் தனது பிரதிநிதியாக உலகில் விட்டுவிட்டு, தந்தை தனது பயணத்தைத் தொடர்கிறான்.

கருப்பையின் உள்ளே: 5-6

ததுக்தம் ரிஷிணா-

கர்பே நு ஸன்னன்வேஷாம் அவேதமஹம் தேவானாம் ஜனிமானி விச்வா சதம் மா புர  ஆயஸீரரக்ஷன்னத: ச்யேனோ ஜவஸா நிரதீயமிதி கர்ப ஏவைதத் சயானோ வாமதேவ ஏவமுவாச (5)

தத்- அதுபற்றி; ரிஷிணா- முனிவரால்; உக்தம்- செல்லப்பட்டுள்ளது; கர்பே நு- கர்பப்த்திலேயே; அஹம்- நான்; ஏஷாம்- இந்த; தேவானாம்- தேவர்களின்; விச்வா- எல்லா; ஜனிமானி- பிறப்புகளை; அவேதம்- அறிந்து கொண்டேன்; சதம்- நூறு; ஆயஸீ: புர:- இரும்புக் கோட்டைகள்; மா- என்னை; அத:- கீழே; அரக்ஷன்- காவல் செய்தன; ச்யேன:- பருந்து; ஜவஸா- விரைவாக; நிரதீயம்- வெளிவந்தேன்; இதி- என்று; கர்ப: ஏவ- கர்ப்பத்திலேயே; சயான:- படுத்தவாறே; ஏதத்- இதனை; வாமதேவ:- வாமதேவர்; ஏவம்- இவ்வாறு; உவாச-கூறினார்.

5. அதுபற்றி முனிவரால் சொல்லப்பட்டுள்ளது: கர்ப்பத்தில் இருக்கும்போதே நான் தேவர்களின் பிறப்புகள் அனைத்தையும் அறிந்துகொண்டேன். நூறு இரும்புக் கோட்டைகள் என்னைக் காவல் காத்தன. ஒரு பருந்துபோல் விரைவாக நான் வெளியே வந்தேன். கர்ப்பத்தில் படுத்திருக்கும்போதே வாமதேவர் இவ்வாறு கூறினார்.

தாயின் கர்ப்பத்தில் இருக்கும்போதே அனுபூதி பெற்றவர் வாமதேவர். அக்கினி தேவன் முதலான தேவர்களுக்கு மறுபிறவிகள் உண்டு என்பதை அவர் அப்போது அறிந்துகொண்டார். அதனுடன், தமது முற்பிறவி உண்மைகளையும் அறிந்தார். எத்தனையோ பிறவிகள் எடுத்து, அந்தப் பிறவிகள் ஒவ்வொன்றிலும் பல்வேறு உடம்புகளைத் தாங்கி வாழ்ந்தார். அந்த உடம்புகளையே இங்கு இரும்புக் கோட்டைகள் என்று அவர் கூறுகிறார். உடம்பு ஒவ்வொன்றும் ஓர் இரும்புக் கோட்டையாக உயிரைச் சிறைப்பிடித்து வைப்பதுபோல் வைத்துள்ளன. வலையைக் கிழித்து வெளியேறுகின்ற பருந்துபோல் தாம் இந்தக் கோட்டைகளைக் கடந்து, இந்தப் பிறவியைப் பெற்று, அனுபூதி அடைந்ததாக அவர் கூறுகிறார்.

நாம் ஒவ்வொருவரும் தாயின் கருவில் இருக்கும்போது, இந்த அனுபவத்தைப் பெறுகிறோம். ஆனால் பூமியில் பிறந்ததும் அதனை மறந்துவிடுகிறாம். ஒன்பதாம் மாதத்தில் எல்லா அங்கங்களும் பூர்த்தியாகிறது. முற்பிறவி நினைவு வருகிறது. புண்ணிய பாவங்களின் உணர்வு வருகிறது. ஆனால் பிறந்ததும் கடவுளின் மாய சக்தியால் அவற்றை மறந்து விடுகிறோம் என்கிறது கர்ப்ப உபநிஷதம்.

ஸ ஏவம் வித்வான் அஸ்மாத் சரீரபேதாதூர்த்வ உத்க்ரம்- யாமுஷ்மின் ஸ்வர்கே லோகே ஸர்வான் காமான் ஆப்த்வாஸம்ருத: ஸமபவத் ஸமபவத் (6)
(யதாஸ்தானம் கர்பிண்ய:)

1. அத நவமே மாஸி ஸர்வலக்ஷண ஜ்ஞானகரண ஸம்பூர்ணோ பவதி
பூர்வஜாதிம் ஸ்மரதி சுபாசுபம் ச கர்ம விந்ததி
ஜாதமாத்ரஸ்து வைஷ்ணவேன வாயுனா ஸம்ஸ்ப்ருஷ்ட்டஸ்ததா ந
ஸ்மரதி ஜன்ம மரணானி ந ச கர்ம சுபாசுபம் விந்ததி
    -கர்ப்ப உபநிஷதம், 3,4.

ஸ:- அவர்; ஏவம்- இவ்வாறு; வித்வான்- அறிந்து; அஸ்மாத்- இந்த; சரீர பேதாத்- உடம்பு அழிந்ததும்; ஊர்த்வ: உத்க்ரம்ய- வெளியேறி; அமுஷ்மின்- அந்த; ஸ்வர்கே லோகே- சொர்க்கலோகத்தில்; ஸர்வான்- எல்லா; காமான்- ஆசைகளும்; ஆப்த்வா- நிறைவேறப்பெற்று; அம்ருத:- மரணமிலா நிலையை; ஸமபவத்- அடைந்தார்; கர்பிண்ய:- கர்ப்பிணிகள்; யதா ஸ்தானம்- உரிய இடத்தில்.

6. வாமதேவர் இந்த உண்மைகளை அறிந்து, உடம்பு அழிந்ததும் வெளியேறி சொர்க்கலோகத்திற்குச் சென்றார். அங்கே எல்லா ஆசைகளும் நிறைவேறப் பெற்று, மரணமிலா நிலையை அடைந்தார்; மரணமிலா நிலையை அடைந்தார்.

(கர்ப்பிணிகள் உரிய இடத்தில் வந்து அமரலாம்.)

இதி ஐதரேயோபநிஷதி த்விதீயாத்யாயே ப்ரதம: கண்ட:


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !