வேதநாராயண பெருமாள் கோவில் தேரோட்டம் கோலாகலம்!
தொட்டியம்: தொட்டியம் யூனியன் திருநாராயணபுரம் கிராமத்தில் உள்ள புகழ் பெற்ற வைஷ்ணவ தலமான ஸ்ரீவேதநாராயண பெருமாள் கோவிலில் வைகாசி மாதம் முன்னிட்டு, நடந்த திருத்தேரினை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். எம்பெருமாள் நரசிங்க உருவமெடுத்து அசுரன் இரணியனை வதைத்த பின்னர் கோபம் தீராத எம்பெருமாளை பிரகலாதன் சாந்தமான உருவத்தில் காட்சியளிக்க வேண்டிக்கொண்டார். பிரகாதனின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு பெருமாள் கோபம் தணிந்து திருநாராயணபுரத்தில் வேதநாராயணன் என்ற பெயருடன் உபயநாச்சியார்களுடன் எழுந்தருளி பள்ளி கொண்ட திருக்கோலத்தில் காட்சியளித்தார். இதனால் இத்தலம் சதுர்வேதி மங்கலம், வேதபுரி, ஆதிரங்கம் என பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டு, தற்போது திருநாராயணபுரம் என்ற பெயரிட்டு அழைக்கப்படுகிறது. மேலும் நான்கு வேதங்களையும் தலையணையாக கொண்டு பிரம்மாவிற்கு வேத உபதேசம் செய்த திருத்தலமாகும். இதனால் இக்கோவில் பிரகலாத ÷க்ஷத்திரம் என்ற பெயர் பெற்றதாக புராணங்களில் கூறப்படுகிறது. இத்திருத்தலத்தை வழிபடுவோருக்கு நல்ல கல்வி அமைதல், துன்பங்கள் நீங்குதல், தீ விபத்து மற்றும் தீக்காயம் குணமாதல், பெண்கள் திருமண தடை நீக்கவும், குழந்தை பேறு கிடைக்கவும் வேதநாயகி தாயாரை வழிபட்டு வருகின்றனர்.
இத்தகைய பெருமைவாய்ந்த இக்கோவிலின் வைகாசி பெருந்திருவிழா கடந்த, 12ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆழ்வார்கள் தினமும் பாரசுரங்கள் பாடி செல்ல எம்பெருமாளின் உள்புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக எம்பெருமாள் நேற்று முன்தினம் காலை, 8.40க்கு உபயநாச்சியாருடன் பெருமாள் எழுந்தருளினார். பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்ற கோஷங்களுடன் திருத்தேரினை வடம் பிடித்து இழுக்க, 11.05 மணிக்கு திருத்தேர் நிலைக்கு வந்தடைந்தது. விழாவினையொட்டி பக்தர்களுக்கு அன்னதானங்கள் வழங்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை தக்கார் ஜெயப்பிரியா, செயல் அலுவலர் சூரியநாராயணன், ஊர் முக்கியஸ்தர்கள், கிராம பொதுமக்கள் உட்பட பல்வேறு கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.