உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாம் யார்? கடவுள்யார்? என்பதை உணர்த்தும் இஸ்கான்!

நாம் யார்? கடவுள்யார்? என்பதை உணர்த்தும் இஸ்கான்!

ஹரே கிருஷ்ண இயக்கம் என்ற பெயரில் உலகெங்கிலும் பிரபலமாக விளங்கும் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) 1966ஆம் ஆண்டில் அ.ச.பக்தி வேதாந்த சுவாமி பிரபுபாதரால் தொடங்கப்பட்டது. முறையான குரு சீடப் பரம்பரையில் வந்த ஆச்சாரியரான ஸ்ரீல பிரபுபாதர், பகவத் கீதை, ஸ்ரீமத் பாகவதம் போன்ற வேத சாஸ்திரங்களின் அடிப்படையில் கிருஷ்ண பக்தியினை மக்கள் மத்தியில் எடுத்துரைத்தார். அவரது தெளிவான கருத்துகள் அமெரிக்க, ஐரோப்பிய மக்களின் இதயத்தில் உட்புகுந்து பெருத்த மாற்றத்தை ஏற்படுத்தின. அதனைத் தொடர்ந்து, இவ்வியக்கம் மிகவும் குறுகிய காலத்தில் இமாலய வளர்ச்சி பெற்று உலகின் ஆர் கண்டங்களுக்கும் பரவியது. இயக்கத்தில் இணைந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஸ்ரீல பிரபுபாதரின் போதனைகளைப் பின்பற்றி, கிருஷ்ண பக்தியை மக்களிடம் எடுத்துச்செல்லும் சுயநலமற்ற திருப்பணியை மேற்கொண்டனர். ஸ்ரீல பிரபுபாதரால் எழுதப்பட்ட பல்வேறு புத்தகங்கள் இலட்சக்கணக்கில் பல்வேறு மொழிகளில் வினியோகம் செய்யப்பட்டன. அப்புத்தகங்கள் உலகின் பல்வேறு அறிஞர்களாலும், பண்டிதர்களாலும் விரைவில் அங்கீகரிக்கப்பட்டன. ஸ்ரீல பிரபுபாதரால் தொடங்கப்பட்ட இஸ்கான் தொடர்ந்து உலகெங்கிலும் வளர்ச்சி பெற்று வருகின்றது. ஜாதி, மதம், இனம், மொழி, அந்தஸ்து, கல்வியறிவு போன்ற எந்த பேதங்களும் இன்றி மனித குலத்தின் மேன்மைக்காக ஆன்மீக ஞானத்தைப் பரப்பி வரும் இவ்வியக்கம், தற்போது நூற்றுக்கணக்கான நாடுகளிலும், பல்வேறு நகரங்களிலும் உற்சாகத்துடன் செயல்பட்டு வருகின்றது.

முக்கிய செயல்பாடுகள்: ஹரி நாம சங்கீர்த்தனம், பகவத் கீதை போன்ற சாஸ்திரங்களை வினியோகித்தல், பக்தி வேதாந்த அகடமியின் மூலம் நவீன காலத்திற்கு உகந்த யோகப்பயிற்சியை கற்றுத்தருதல், கல்லூரி மாணவர்களுக்கு ஆன்மீகப்பயிற்சி, இல்லங்களில் ஆன்மீக நிகழ்ச்சிகள்,ஞாயிறு விருந்து - ஒவ்வொரு ஞாயிறன்றும் மாலை 5 முதல் 9மணி வரை பஜனை, கீர்த்தனை, ஆரத்தி, ஆன்மீகப் பிரசங்கம் மற்றும் சுவையான பிரசாத விருந்து, ஸ்ரீஸ்ரீ ராதாகிருஷ்ணருக்குப் புதிய திருக்கோவில் அமைக்கும் பணி - பகவான் ராதாகிருஷ்ணருக்கு பிரம்மாண்டமான திருக்கோவிலுக்கான ஆரம்பகட்டப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன.

பிரார்த்தனை:
நாம் தற்போது வாழ்ந்துவரும் இந்தக் கலியுகம் சண்டையும், சச்சரவுகளும் நிறைந்தது. இதனை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். உடல் ஆரோக்கியமின்மை, வியாதிகள், மனசஞ்சலங்கள், குடும்பப் பிரச்சனைகள், சமுதாயப் பிரச்சனைகள், தேசப் பிரச்சனைகள், அதிக குளிர், அதிக வெப்பம், புயல், மழை போன்றவை அதிகரித்தவண்ணம் உள்ளன. மக்கள் மத்தியில் பல்வேறு வசதிவாய்ப்புகள் உள்ளபோதிலும் எவரும் மகிழ்ச்சியாகவோ, அமைதியாகவோ வாழ்வதில்லை. சுயநல ஆசைகளுடன் வாழும் பலரும் உண்மையில் மிருகத்தினைப்போல் வாழ்ந்து வருகின்றனர். பெறற்கரிய மானிடப்பிறவியைப் பெற்றவர்கள் இதனை முழுமையாக உபயோகித்து, நாம் யார்? கடவுள் யார்? நாம் ஏன் துன்பப்படுகிறோம்? வாழ்க்கையின் குறிக்கோள் என்ன? போன்றவற்றை அறிந்து கொள்வது அவசியம். இவற்றை உணர்வது தன்னுணர்வு எனப்படும். இந்த தன்னுணர்வை அடைய பல்வேறு வழிகள் வேத சாஸ்திரங்களில் கொடுக்கப்பட்டுள்ள போதிலும், இந்த கலியுகத்தில் உள்ள மக்கள் மற்ற யுகங்களைக் காட்டிலும் குறைந்த புத்தி மற்றும் ஆயுளைப் பெற்ற துரதிர்ஷ்டசாலிகளாக இருப்பதால், அவர்களுக்கென்று ஓர் எளிமையான வழிமுறை கொடுக்கப்பட்டுள்ளது - அதுவே ஹரிநாமசங்கீர்த்தனம். இந்த சங்கீர்த்தனத்தில் ஈடுபடுவதன் மூலம் முக்தியடைவது எளிது. இதுவே எல்லா வேதங்களின் கூற்றுமாகும்.

பிருஹன் நாரதீய புராணம் கூறும் செய்தி: சண்டையும் சச்சரவும் நிறைந்த கலியுகத்தில், ஹரிதிருநாமத்தைச் சொல்வதைத் தவிர வேறு கதியில்லை, ஹரிதிருநாமத்தைச் சொல்வதைத் தவிர வேறு கதியில்லை, ஹரிதிருநாமத்தைச் சொல்வதைத் தவிர வேறு கதியில்லை. பகவான் கிருஷ்ணரின் திருநாமங்களை உச்சரிப்பதற்குக் கட்டுப்பாடுகள் ஏதுமில்லை. எனவே கீழ்க்கண்ட மந்திரத்தை தினமும் குறைந்தது 108 முறை காதுகளுக்குக் கேட்கும்படி உச்சரியுங்கள். ஆனந்தம் அடையுங்கள்: ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே            ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே

முக்கிய விழாக்கள்:
தேர்த்திருவிழா (ஜனவரி): உலகப்புகழ்பெற்ற, புராதனமான பூரிஜகன்னாதர் இரதயாத்திரையைப் பின்பற்றி, அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தினர் கோவையில் நடத்தும் திருவிழா.

கௌரபூர்ணிமா (பிப்ரவரி அல்லது மார்ச்) : ஹரே கிருஷ்ண மஹாமந்திரத்தின் முன்னோடியான பகவான் ஸ்ரீ சைதன்யர் அவதரித்த திருநாள் நரசிம்ம ஜெயந்தி (மே): பகவான் கிருஸ்ணர், தன்னுடைய பக்தரான பிரகலாததரைக்காக்க அவதரித்த திருநாள்  ஸ்ரீராதாகோவிந்தர் ஊஞ்சல் உற்சவம்

(ஜுலை அல்லது ஆகஸ்ட்): ஐந்து நாட்கள் நடைபெறும் இவ்விழாவின் போது பக்தர்களே ஊஞ்சல் சேவையைச் செய்து பேரானந்தமடையலாம்ஸ்ரீகிருஷ்ண ஜென்மாஷ்டமி (ஆகஸ்ட் அல்லது செப்டம்பர்): பகவான் கிருஷ்ணர் பூலோகத்தில் அவதரித்த திருநாள் ஸ்ரீதாமோதர ஆரத்தி (அக்டோபர் - நவம்பர்): ஒருமாத காலத்திற்குத் தொடர்ந்து நடைபெறும் இந்த உற்சவத்தில், பகவான் தாமோதரருக்கு நெய்விளக்கு ஆரத்தியைச் சமர்ப்பிக்கலாம்.

இஸ்கான்  கோயம்புத்தூர்

மூலவர் : பூரிஜெகந்நாதர், ஸ்ரீபலதேவர், ஸ்ரீசுபத்ரா தேவி
தரிசன நேரம் - அதிகாலை 4.15 முதல் மதியம் 1மணி வரை, மாலை 5 முதல் 8.30மணி வரை 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !