திருப்பரங்குன்றத்தில் விசாக திருவிழா துவங்கியது!
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விசாக திருவிழா சுவாமிகளுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.மாலை உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, ஆறுமுகம் கொண்ட சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு அபிஷேக, ஆராதனைகள் முடிந்து சிவாச்சாரியார்களால் காப்பு கட்டப்பட்டது. இரவு 7 மணிக்கு உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். மண்டபத்தின் மையப்பகுதியில் உள்ள மேடையின் அடிப்பகுதியில் தண்ணீர் நிரப்பப்பட்டு மேடையில் வைக்கப்பட்டிருந்த ஊஞ்சலில் சுவாமி எழுந்தருளினார். அங்கு வசந்த உற்சவம் முடிந்து அருள்பாலித்தார். இந்த வசந்த உற்சவம் ஜூன் 10 வரை நடக்கிறது. விசாக பால்குட திருவிழாவை முன்னிட்டு ஜூன் 11 அதிகாலை 5 மணிக்கு சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு பாலாபிஷேகம் முடிந்து, காலை 7 மணிக்கு சுவாமி விசாக கொறடு மண்படத்தில் எழுந்தருளுவார். பக்தர்கள் பாதயாத்திரையாக சுமந்துவரும் பால்குடங்களை கொண்டு மதியம் 2 மணி வரை சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படும். ஜூன் 12 காலை உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு அபிஷேக ஆராதனைகள் முடிந்து தங்க குதிரை வாகனத்தில் தியாகராஜர் பொறியியல் கல்லுாரி வளாகத்திலுள்ள மொட்டையரசு திடலில் எழுந்தருளுவார். அங்கு திருவிழா முடிந்து இரவு சுவாமி பூப்பல்லக்கில் கோயிலுக்கு திரும்புவார்.