சிதம்பரம் திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி உற்சவம்!
சிதம்பரம்: திரவுபதியம்மன் கோவில் வைகாசி பெருவிழா உற்சவத்தையொட்டி நடந்த தீமிதியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். சிதம்பரம் திரவுபதியம்மன் கோவிலில் வைகாசி மாத அக்கினி வசந்த மகோற்சவம் கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனையொட்டி திரவுதியம்மனுக்கு தினம் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. அம்மன் சன்னதியில் 9 நாட்களுக்கு இரவு மகாபாரதம் கதை சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. 10ம் நாள் உற்சவமான தீமிதி உற்சவம் நேற்று முன்தினம் மாலை நடந்தது. இதனையொட்டி திரவுபதியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை பூஜைகள் நடந்தது. திரவுபதியம்மன் கோவில் புறப்பாடு செய்து சன்னதி முன்பு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் பாலமானில் அக்கினி சட்டி சிறப்பு வழிப்பாடு செய்து ஊர்வலம் கோவிலுக்கு வந்தனர். சன்னதி எதிரில் அமைக்கப்பட்டிருக்கும் அக்கினி குண்டத்தில் பக்தர்கள் இறங்கி தீமிதித்து வேண்டுதல் பரிகாரம் நிவர்தி செய்து அம்மன் தரிசனம் செய்தனர். இதில் சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தீமித்தனர். விழா ஏற்பாடுகளை நிர்வாக அறங்காவலர் கவுன்சிலர் ரமேஷ் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்தனர்.