பழநியில் ஆடிக் கார்த்திகை மலர் காவடி எடுத்த பக்தர்கள்!
ADDED :4234 days ago
பழநி:ஆடிக்கார்த்திகையை முன்னிட்டு பழநி கோயிலில் மலர் காவடிகளுடன் பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.கார்த்திகைக்காக அதிகாலை 4 மணிக்கு மலைக்கோயில் நடை திறக்கப்பட்டது. பெங்களூருவைச் சேர்ந்த பக்தர்கள் மலர் காவடிகள் எடுத்து நேர்த்திகடன் செலுத்தினர். பால்குடம், தீர்த்தகாவடியுடன் ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். படிப்பாதையில் கற்பூரம் ஏற்றி பக்தர்கள் படிபூஜை செய்தனர். மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் 108 திருவிளக்கு பூஜை நடந்தது.பொது தரிசன வழியில், இரண்டு மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். திருஆவினன்குடி கோயிலில் இருந்து குழந்தை வேலாயுதசுவாமி மயில் வாகனத்திலும்; பெரியநாயகியம்மன் கோயிலில் இருந்து முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை வெள்ளிமயில் வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.