ஐப்பசி மாத கிருத்திகை: திருத்தணியில் பக்தர்கள் கூட்டம்!
திருத்தணி: முருகன் கோவிலில் நேற்று நடந்த கிருத்திகை விழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால், மூன்று மணி நேரம் வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோவிலில், நேற்று ஐப்பசி மாத கிருத்திகை விழாவை முன்னிட்டு, அதிகாலை, 4:30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.தொடர்ந்து, தங்க கிரீடம், தங்க வேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. காலை 10:00 மணிக்கு, காவடி மண்டபத்தில் உற்சவர், முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. அதே நேரத்தில், ஆபத்சகாய விநாயகர், சண்முகர், வள்ளி, தெய்வானை மற்றும் துர்க்கையம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. இரவு 7:00 மணிக்கு, உற்சவர் முருகப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன் வெள்ளி மயில் வாகனத்தில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்ததால், பொதுவழியில் மூலவரை தரிசிக்க, மூன்று மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.