திருத்தணி உண்டியலில் ரூ.41 லட்சம்
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், கடந்த 20 நாட்களில் உண்டியலில், 41.83 லட்சம் ரூபாய் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு தினமும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர். பக்தர்கள், தங்களது வேண்டுதலை நிறைவேற்ற மலைக்கோவிலில் உள்ள உண்டியல்களில் ரொக்கம், தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை காணிக்கையாக செலுத்துகின்றனர். அந்த வகையில், கடந்த மாதம், 28ம் தேதி முதல், இம்மாதம், 17ம் தேதி வரை, பக்தர்கள் செலுத்திய காணிக்கைகளை நேற்று முன்தினம், கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் புகழேந்தி ஆகியோர் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டது. 200க்கும் மேற்பட்ட கோவில் ஊழியர்கள், எண்ணினர். இதில், 41,83,681 ரூபாய், 169 கிராம் தங்கம், 6,303 கிராம் வெள்ளி ஆகியவை வருவாய் கிடைத்துள்ளது. இந்த தொகை, 20 நாட்களில் கோவிலுக்கு வருவாய் கிடைத்தது.