உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேலம் கோவில்களில் நேற்று நடந்த திருமணங்கள் 1,120!

சேலம் கோவில்களில் நேற்று நடந்த திருமணங்கள் 1,120!

சேலம்: ஆண்டின் கடைசி முகூர்த்த நாளான நேற்று, சேலம் மாநகர், புறநகர் கோவில்களில், 1,000 க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்துள்ளன. திருமண மண்டபங்கள் ஹவுஸ்புல்லாக காட்சி அளித்தன.

கார்த்திகை பண்டிகை: நடப்பு, 2014ம் ஆண்டின், டிச., 1 மற்றும் 10ம் தேதிகள், முகூர்த்த தினங்கள். இதில், டிச., 6ம் தேதி, கார்த்திகை பண்டிகை கொண்டாப்படுகிறது. பண்டிகைக்கு பின் வரும் தேய்பிறை நாளில், திருமணம் உள்ளிட்ட சுபகாரிய நிகழ்ச்சிகளை, சேலம் மக்கள் தவிர்த்து விடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அது மட்டுமின்றி, இதை தொடர்ந்து, மார்கழி மாதம் பீடை மாதம் என, சித்தரிக்கப்படுவதால், அந்த மாதத்திலும், சுப நிகழ்ச்சிகளை தவிர்த்து விடுவது வழக்கம். இதனால், நேற்றைய முகூர்த்த நாள், நடப்பாண்டின் கடைசி முகூர்த்த நாளாக கருதப்பட்டது.

சமுதாய கூடங்கள்: நேற்று, சேலம் மாநகரில் பிரபல திருமண மண்டபங்கள், சிறிய அளவிலான மண்டபங்கள், சமுதாய கூடங்கள், திருமண கோஷ்டியினரால் நிரம்பி வழிந்தன. அது மட்டுமின்றி, நட்சத்திர ஓட்டல் கூட்ட அரங்குகளிலும் திருமண நிகழ்ச்சிகள் நடந்தன. சேலம் மாநகரில், பிரசித்தி பெற்ற சுகவனேஸ்வரர் கோவிலில், 102; கோட்டை பெருமாள் கோவிலில், 46; உத்தமசோழபுரம் கைலாசநாதர் கோவிலில், 110; ஊத்துமலை முருகன் கோவிலில், 22; கடை வீதி காசி விஸ்வநாதர் கோவிலில், 16, திருமணங்கள் நடந்துள்ளன. மேலும், ஏற்காடு அடிவாரம் ஆறுபடை முருகன் கோவிலில், 120, அம்மாபேட்டை செங்குந்தர் பாலசுப்ரமணியர் கோவில், அயோத்தியாபட்டணம் ராமர் கோவில், செட்டிச்சாவடி முருகன் கோவில், பேர்லேன்ட்ஸ் முருகன் கோவில் என, இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள், தனியார் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், மொத்தம், 1,120 திருமணங்கள் நடந்துள்ளன.

புரோகிதர்களுக்கு மவுசு: நடப்பாண்டின் கடைசி முகூர்த்த நாளான நேற்று, திருமணங்களின் எண்ணிக்கையில், பல மடங்கு அதிகரிப்பு ஏற்பட்டது. நேற்று காலை, 6:00 மணி துவங்கி, 10:00 மணி வரை, குறிப்பிட்ட நேரத்தில், 1,000 திருமணங்கள் நடந்தன. இதனால், புரோகிதர்களுக்கு மவுசு அதிகரித்தது. ஒரே புரோகிதர், பல திருமணங்களுக்கு ஒத்துக் கொண்டதால், கார்களிலும், மொபட் உள்ளிட்ட வாகனங்களிலும், புரோகிதர்கள் திருமணம் நடக்கும் இடங்களுக்கு, அவசர அவசரமாக சென்று திருமணங்களை நடத்தி வைத்தனர். அது மட்டுமின்றி, சில இடங்களில் புரோகிதர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால், வழக்கமான, தற்காலிக புரோகிதர்கள் காத்திருந்து கார்களில் அழைத்துச் சென்று, திருமணங்களை நடத்திய சம்பவங்களும் அரங்கேறின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !