உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / "அரோகரா கோஷத்துடன் தேரோட்டம் ; தைப்பூச விழா கோலாகலம்!

"அரோகரா கோஷத்துடன் தேரோட்டம் ; தைப்பூச விழா கோலாகலம்!

திருப்பூர் : தைப்பூச தேர்த்திருவிழாவில்,"வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா பக்தர்களின் கோஷத்துடன், சிவன்மலையில் சுப்பிரமணிய சுவாமி, பக்தர்கள் வெள்ளத்தில் பவனி வந்தார்.

காங்கயம், சிவன்மலை சுப்பிரமணியசுவாமி கோவில் தைப்பூச தேர்த்திருவிழா, கடந்த மாதம் 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் இரவு, சுப்பிரமணியசுவாமி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நேற்று காலை 6.00 மணிக்கு, உற்சவ மூர்த்திகள் ரதத்திற்கு எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மாலை 4.30 மணிக்கு, தேர் இழுக்கும் நிகழ்ச்சி துவங்கியது. கலெக்டர் கோவிந்தராஜ் உள்ளிட்டோர் பங்கேற்று, வடம் பிடித்து துவக்கி வைத்தனர். நிலையில் இருந்து புறப்பட்ட தேர், ஒன்றாம் நிலையில் நிறுத்தப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இன்று, இரண்டாம் நிலை வரை தேரோட்டம் நடக்கும்.

மங்கலம் அருகேயுள்ள மலைக்கோவில் குழந்தை வேலாயுதசாமி கோவில் தேர்த்திருவிழாவில், நேற்று காலை 6.00 மணிக்கு, வள்ளி தெய்வானையுடன் புறப்பாடு ஆன குழந்தை வேலாயுத சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளினார். மாலை 5.00 மணிக்கு, தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. முதலில் விநாயகர் தேரும், அதன்பின், குழந்தை வேலாயுதசாமி தேரும் ரத வீதியுலா சென்றன. மாø 6.45 மணிக்கு தேர்கள் நிலையை சென்றடைந்து, மகாதீபாராதனை நடந்தது. இன்று பரிவேட்டையும், நாளை மகாதரிசனம் மற்றும் அன்னதான நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

கருமத்தம்பட்டி அருகே சென்னியாண்டவர் கோவில் தேரோட்டம் கடந்த 25ம் தேதி துவங்கியது. நேற்று காலை 6.30 மணிக்கு சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும், மாலை 4.00 மணிக்கு தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. தேரோட்டத்தின் போது, பக்தர்கள் "அரோகரா கோஷத்துடன் தேர் இழுத்தனர்.

பக்தர்கள் அவதி : திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோவிலில், தைப்பூச தினத்தையொட்டி எந்தவித முன்னேற்பாடும் செய்யப்படாததால், கோவிலில் திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள், நெரிசலில் சிக்கி திக்குமுக்காடினர். சண்முகநாதர் சன்னதியில் பூஜைக்கு தாமதம் ஏற்பட்டதால், காத்திருந்த பக்தர் கூட்டம் அதிகரித்து, நெரிசலில் பலரும் முண்டியடித்து கீழே விழுந்தனர்.கோவில் உள்பிரகார மண்டபத்தில் உற்சவமூர்த்திக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது; அங்கு சுட்டெரிக்கும் வெயிலில் கால்கடுக்க காத்திருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள், அவதிபட்டனர். தைப்பூச தினத்தன்று, கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர் வரும் நிலையில், பக்தர்களை ஒழுங்குப்படுத்தவோ, வரிசை அமைத்து பக்தர்கள் நிம்மதியாக சுவாமி தரிசனம் செய்யவோ, கோவில் நிர்வாகம் சார்பில் எவ்வித ஏற்பாடும் செய்யப்படவில்லை.

கோவில் வளாகத்தில் ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டதால், அதனை பெறுவதில் குழப்பம் ஏற்பட்டு, பக்தர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தைப்பூசம் என்பதால், அதிகளவில் பக்தர்கள் வருவர் என்று முன்கூட்டியே தெரிந்தும் கூட, எந்தவொரு வசதியையும் செய்யாததை கோவில் நிர்வாகத்துக்கு பக்தர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !