கதலி நரசிங்கபெருமாள் கோயில் குளத்தை புனரமைக்க வேண்டும் : பக்தர்கள் எதிர்பார்ப்பு!
அம்மையநாயக்கனூர்: அம்மையநாயக்கனூரில் கதலி நரசிங்கபெருமாள் கோயில் குளத்தை புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அம்மையநாயக்கனூரில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த கதலி நரசிங்க பெருமாள் கோயில் உள்ளது. தற்போது இந்துசமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கோயில் முன்புறம் மைய மண்டபத்துடன் கூடிய குளம் உள்ளது. மண்டபம் மிகவும் பாழடைந்துள்ளது. நீர் வரத்திற்கு வழியில்லை.
முறையான பராமரிப்பு இல்லாததால், குளம் முழுவதும் செடிகள் புதராக மண்டியுள்ளது. குப்பை கொட்டும் இடமாகவும், கழிவுநீர் தேங்கும் குளமாகவும் பயன்படுத்தப்படுகிறது. குளத்தின் கரைமேல் அமைந்துள்ள பெண்கள் சுகாதார வளாகத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர் நேரடியாக குளத்திற்கு வருகிறது. புனிதமாக பாதுகாக்க வேண்டிய கோயில் குளத்தில், கழிவு நீர் தேங்குவது பக்தர்களின் மனதை புண்படுத்துகிறது. இதுவரை இந்து சமய அறநிலையத்துறையோ, பேரூராட்சி நிர்வாகமோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே என வேதனை தெரிவிக்கின்றனர். விரைந்து குளத்தை புனரமைக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.