புக்குளம் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா!
தியாகதுருகம்: புக்குளம் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. தியாகதுருகம் அடுத்த புக்குளத்தில் நுõற்றாண்டு பழமையான முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இவ்வளாகத்தில் கெங்கையம்மன், விநாயகர், முருகன் சன்னதிகள் உள்ளது. இக்கோவிலில், 30 லட்சம் ரூபாய் மதிப்பில் திருப்பணி வேலைகள் செய்து முடிக்கப்பட்டது. ஸ்தபதி ராதாபுரம் அய்யனார் தலைமையில் கோபுரம், சுவாமி சிலைகள் வேலைகள் கலைநயத்துடன் செய்யப்பட்டது. இக்கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 5ம் தேதி காலை கணபதி பூஜையுடன் துவங்கியது. செந்தில்நாத சி வாச்சாரியார், பாண்டுரங்க சாஸ்திரிகள் தலைமையில், நேற்று காலை 8:00 மணிக்கு, விமான கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். பின்னர் மூலவர் அம்மனுக்கு அபிஷேக ஆராதனை, மலர் அலங்காரம் செய்து மகாதீபாராதனைகள் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது.