அன்னை மாத கோவிலின் 103வது ஆண்டு தேர் திருவிழா!
கும்மிடிப்பூண்டி: ஆரம்பாக்கம், அன்னை மாத கோவிலின், 103வது ஆண்டு தேர் திருவிழா நடைபெற்றது. கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் உள்ள, அன்னை மாதா கோவிலில், நேற்று முன்தினம், 103வது ஆண்டு தேர் திருவிழா, பாதிரியார் ஜோசப் ஆல்பர்ட் தலைமையில் நடைபெற்றது. கடந்த, 14ம் தேதி கொடியேற்றி, அன்னை மாதாவுக்கு தினசரி சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. தேர் திருவிழா நாளான நேற்று முன்தினம், மயிலை உயர் மறைமாவட்ட முதன்மை குரு பாதிரியார் அருள்ராஜ் தலைமையில், சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மாதா திருஉருவ சிலைக்கு முடி சூட்டும் நிகழ்வை, அருட்சகோதரி மார்க்கரேட் நடத்தினார். அதை தொடர்ந்து, பாதிரியார் பெலவேந்திரன் தேர் பவனியை துவக்கி வைத்தார். தேர் திருவிழாவில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு, அன்னை மாதாவின் திருவருளை பெற்று சென்றனர்.