வேளாங்கண்ணியில் குருத்தோலை பவனி
நாகப்பட்டினம்: நாகை மாவட்ட தேவாலயங்களில் நேற்று குருத்தோலை ஞாயிறு நிகழ்ச்சியை முன்னிட்டு குருத்தோலை பவனி நடந்தது.இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன் ஜெருசேலம் நகரை நோக்கி சென்றப் போது, மக்கள் கைகளில் குருத்தோலை ஏந்தி வரவேற்றதை நினைவு கூறும் வகையில், நாகை மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் நேற்று காலை குருத்தோலை பவனி நடந்தது.நிகழ்ச்சியை முன்னிட்டு வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா தேவாலயத்தில், நேற்று காலை 6 மணிக்கு சிறப்பு கூட்டு பாடல் திருப்பலி நடந்தது.தொடர்ந்து காலை ஏழு மணிக்கு குருத்தோலை புனிதம் செய்யப்பட்டு, பாதிரியார்கள் தலைமையில் குருத்தோலை பவனி நடந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் கைகளில் குருத்தோலை ஏந்தி தேவாலய வளாகத்தை ஒட்டிய வீதிகளில் பவனி வந்தனர்.தொடர்ந்து பேராலய கீழ் கோவிலில் தமிழ், தெலுங்கு,மலையாளம், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளிலும் திருப்பலியும்,செபமாலையும் நடந்தது.அதேபோல் நாகை,லூர்துமாதா தேவாலயம், மயிலாடுதுறை,சோழவித்தியாபுரம், கருங்கண்ணி, மேமாத்துர் உட்பட மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் பங்கு பாதிரியார்கள் தலைமையில் நடந்த குருத்தோலை பவனியில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.