திருமலையில் தங்கத்தேர் உற்சவம்!
ADDED :3839 days ago
திருப்பதி: திருமலையில் நடைபெற்ற தங்கத்தேர் உற்சவத்தில், உற்சவ மூர்த்திகள் வலம் வந்தனர். திருமலையில், நேற்று முன்தினம் முதல், வருடாந்திர வசந்தோற்சவம் நடந்து வருகிறது. இரண்டாம் நாளான நேற்று காலை, திருமலையில், தங்கத்தேர் வலம் நடந்தது. ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி, தங்க தேரில் வலம் வந்து, மாட வீதியில் கூடியிருந்த பக்தர்களுக்கு அருளினார். இதில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பெப்சிகோ நிறுவன முதன்மை நிர்வாக அதிகாரி, இந்திரா கிருஷ்ணமூர்த்தி நூயி, தேர் வடம் பிடித்து இழுத்தனர். மதியம் 2:00 மணிக்கு, உற்சவ மூர்த்திகளுக்கு, வசந்த மண்டபத்தில் திருமஞ்சனம் நடந்தது. இதில், தேவஸ்தான அதிகாரிகள் பங்கேற்றனர்.