விழுப்புரத்தில் 90 அடி உயர ஆஞ்சநேயருக்கு பாலாபிஷேகம்!
விழுப்புரம்: விழுப்புரம் ஸ்ரீ ஜெயஜெய விஸ்வரூப ஆஞ்சநேயர் சுவாமிக்கு லட்சதீப பெருவிழாவை யொட்டி பாலாபிஷேகம் நடந்தது. விழுப்புரம் ஆஞ்சநேயர் கோவில் குளக்கரையில் அமைந்துள்ள 90 அடி ஸ்ரீ ஜெயஜெய விஸ்வரூப ஆஞ்சநேயர் சுவாமிக்கு, லட்சதீப பெருவிழாவை யொட்டி 9ம் ஆண்டு பாலாபிஷேகம் நடந்தது. நேற்று காலை 10:30 மணிக்கு டாக்டர் லட்சுமணன் எம்.பி., தலைமை தாங்கி, 7 ஆயிரம் லிட்டர் பாலாபிஷேக நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். தொடர்ந்து அரசமங்கலம் வெங்கடேஷ்பாபு பட்டாச்சாரியா சுவாமி முன்னிலையில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூ ஜைகள் நடந்தது. அ.தி.மு.க., மாவட்ட இளைஞரணி செயலாளர் பசுபதி, அண்ணா தொழிற்சங்க செயலாளர் அற்புதவேல், நகர கூட்டுறவு வங்கி தலைவர் சுப்ரமணியன், கோவில் அறங்காவலர் குமார், ராஜாமணி, ஜெயராமன், பத்மநாபன், பாலமணிகண்டன் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை சிலை நிறுவனர் தனுசு செய்திருந்தார்.