மாரியம்மன் கோவில் திருவிழா பக்தர்கள் நேர்த்திக்கடன்
ப.வேலூர்: பொத்தனூர் மகா மாரியம்மன் கோவில் திருவிழாவில், 1,000 பேர் குண்டம் இறங்கியும், 2,000 பெண்கள் தலையில் பூ வாரி கொட்டியும், அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். ப.வேலூர் அடுத்த, பொத்தனூரில், மகா மாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த, 3ம் தேதி கிராம சாந்தி, கம்பம் நட்டு காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினமும், ஸ்வாமி, சிம்மம், ரிஷபம், அன்னபட்சி, பூதகி, யானை, குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கடந்த, 17ம் தேதி, வடிசோறு வைத்து அம்மனுக்கு படையல் வைக்கப்பட்டது. நேற்று முன்தினம், ஸ்வாமி ரதம் ஏறுதல், திருத்தேரில் ஸ்வாமி திருவீதி உலா வருதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை, 6 மணிக்கு பூக்குழி பூஜை நடந்தது. மதியம், 1 மணிக்கு, காவிரி ஆற்றுக்கு சென்ற பக்தர்கள், புனித நீராடி ஊர்வலமாக வந்த, 1,000க்கும் மேற்பட்ட ஆண்கள், கோவில் முன் ஏற்படுத்தப்பட்டிருந்த குண்டத்தில் இறங்கி, அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். அதேபோல், 2,000க்கும் அதிகமான பெண்கள் தலையில் பூவாரி போட்டு, ஸ்வாமிக்கு தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். இன்று (மே, 20) காலை, 7 மணிக்கு பொங்கல், மாவிளக்கு பூஜையும், காலை, 9 மணிக்கு, அக்னி சட்டி எடுத்தும், அலகு குத்தியும், பக்தர்கள், அம்மனுக்கு தங்களது வேண் டுதலை நிறைவேற்றுகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.