உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆண்டுக்கு ஒருமுறை திறக்கப்படும் மகாலிங்கேஸ்வரர் கோவிலில் திருவிழா!

ஆண்டுக்கு ஒருமுறை திறக்கப்படும் மகாலிங்கேஸ்வரர் கோவிலில் திருவிழா!

குன்னுார்: குன்னுாரில், ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் திறக்கப்படும், சுயம்பு மகாலிங்கேஸ்வரர் கோவில், நேற்று திறக்கப்பட்டு, அபிஷேகம் மற்றும் சிறப்பு வழி பாடுகள் நடத்தப்பட்டன. நீலகிரி மாவட்டம், குன்னுார் அருகே, முடியக்கி என அழைக்கப்படும் ஆழ்வார்பேட்டையில், படுகர் இன மக்களின் பூர்வீக கோவிலான, மகாலிங்கேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. சுவாமி, சுயம்பு லிங்கமாக எழுந்தருளியிருக்கும் இக்கோவிலில், ஆண்டுதோறும் ஜூன் மாதம், முதல் திங்களன்று மட்டும் நடை திறந்து, அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான விழா, நேற்று நடந்தது. காலை 7:30 மணிக்கு, நடை திறக்கப்பட்டு, பகல் 1:30 மணி வரை மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்; பின், நடை அடைக்கப்பட்டது. இனி, அடுத்த ஆண்டு தான் நடை திறக்கப்பட்டு, அபிஷேகம் செய்யப்படும். கோடமலை கிராம முக்கியஸ்தர்கள் கூறியதாவது: முதல் கன்று ஈன்ற மாட்டின் பாலை, பச்சை மூங்கிலில் சேகரித்து, அதைக்கொண்டு, மகாலிங்கேஸ்வரருக்கு அபிஷேகம் செய்வர். இதே மாட்டின் பாலில் இருந்து தயாரிக்கப்பட்ட நெய் மட்டும், கோவிலில் விளக்கெரிய பயன்படுத்தப்படும். இவ்வாறு ஏற்றப்படும் விளக்கு அணையும் வரை மட்டுமே, கோவில் நடை திறந்திருக்கும் என்பது, கோவிலின் சிறப்பு. இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர். இதன்படி, ஏற்றப்பட்ட நெய் விளக்கு, ஆறு மணி நேரம் மட்டும் எரிந்ததால், அதுவரை, பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !