லட்சுமி நாராயணர் கோவிலில் மண்டாலபிஷேகம்
ADDED :3929 days ago
திருத்தணி: திருவாலங்காடு ஒன்றியம், ராமாபுரம் கிராமத்தில், ஸ்ரீதச ரூப லட்சுமி நாராயணர் சுவாமி கோவில் புதிதாக கட்டப்பட்டது. இக்கோவிலின் மகா கும்பாபிஷேகம், கடந்த 6ம் தேதி, கோவில் வளாகத்தில் மூன்று யாகசாலைகள், 108 கலசங்கள் வைத்து, கணபதி ஹோமத்துடன் துவங்கி, மறுநாள் 7ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, நடைபெறும் மண்டலாபிஷேகத்தை முன்னிட்டு, தினசரி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடத்தப்பட்டு வருகிறது. மாலையில் இரண்டு மணி நேரம், ஆன்மிக சொற்பொழிவும் நடந்து வருகிறது. நேற்று காலை 8:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை 6:30 மணிக்கு, உற்சவர் சிறப்பு அலங்காரத்தில், கோவில் மாடவீதியில் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.