வடபாதி செல்லியம்மன் கோவில் தீமிதி திருவிழா!
விடையூர்: விடையூர் வடபாதி செல்லியம்மன் கோவில், 41ம் ஆண்டு, தீமிதி திருவிழா, நேற்று முன்தினம் நடந்தது. கடம்பத்துார் ஒன்றியத்துக்கு உட்பட்ட, விடையூர் கிராமத்தில் உள்ளது வடபாதி செல்லியம்மன் கோவில். இங்கு, நேற்று முன்தினம், 41ம் ஆண்டு தீமிதி திருவிழா நடந்தது. முன்னதாக, கடந்த மாதம், 25ம் தேதி, காப்பு கட்டி திருவிழா துவங்கியது. தினமும் மாலையில், அம்மன் மலர் அலங்காரத்தில் வீதிஉலா வந்தார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா, நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில், 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் விரதமிருந்து தீமிதித்தினர். அதன்பின், கோவில் அருகே உள்ள கொல்லாபுரிஅம்மன், செல்லியம்மன் மற்றும் வடபாதி செல்லியம்மன் ஆகிய மூன்று அம்மன்கள், மலர் அலங்காரத்தில், வீதிஉலா நடந்தது. விழாவில், விடையூர் கிராமத்தைச் சுற்றியுள்ள கலியனுார், மணவூர், கடம்பத்துார், வெண்மணம்புதுார் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.