உத்தரகோசமங்கையில் வராகி அம்மனுக்கு பெண்கள் பூஜை!
ADDED :3873 days ago
கீழக்கரை: உத்தரகோசமங்கையில் உள்ள வராகி அம்மனுக்கு, பெண்கள் மஞ்சள் அரைத்து பூசி, சிறப்பு பூஜை நடத்தி வழிபட்டனர்.உத்தரகோசமங்கையில் மங்கை மாகாளியம்மன் எனும் வராகி அம்மன் தனி சன்னதி கோயிலாக உள்ளது. இக்கோயிலில் வராகி நவராத்திரி உற்சவம் கடந்த ஜூலை 1 ல் துவங்கி இன்று (ஜூலை 25) இரவு 8 மணி வரை நடந்து வருகிறது. இதையொட்டி, கோயிலில் உள்ள ஏராளமான அம்மிக்கற்களில் பெண்கள், நேற்று பச்சை விரலி மஞ்சளை அரைத்து ஆறடி சுயம்பு பீடத்தில் உள்ள அம்மனுக்கு பூசி சாந்தப்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர், கோரிக்கைகளை அங்குள்ள பெட்டியில் எழுதி போட்டனர். முன்னோர்கள் வாங்கிய பூர்வ ஜென்ம சாபங்களை போக்கும் சக்தியாக அம்மன் விளங்குவதால், இக்கோயிலில் ஆடி மாதத்தில் பக்தர்கள் அதிகளவு வருகின்றனர்.