உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் ரூ. 21.86 லட்சம் காணிக்கை

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் ரூ. 21.86 லட்சம் காணிக்கை

நாமக்கல்: நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் உண்டியலில், 21.86 லட்சம் ரூபாய் பக்தர்கள் காணிக்கை செலுத்தி இருந்தனர். நாமக்கல் நகரில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் ஸ்வாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், தமிழகம் மட்டும் அல்லாமல், வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டினர் என, தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து, ஸ்வாமியை வழிபட்டுச் செல்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் ஸ்வாமிக்கு, பணம், நகை காணிக்கை செலுத்துவது வழக்கம். பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கையை, குறிப்பிட்ட மாதத்துக்கு ஒரு முறை, பொதுமக்கள் முன்னிலையில் திறக்கப்பட்டு, எண்ணப்பட்டு அவற்றை கோவில் கணக்கில் வரவு வைக்கப்படும். அதன்படி, நேற்று உண்டியல்கள் திறக்கப்பட்டு அதில் இருந்த பணம், நகை ஆகியவற்றை எண்ணப்பட்டது. ஹிந்து சமய அறநிலையத் துறையின் உதவி ஆணையர் சபர்மதி தலைமையில், அலுவலர்கள், பொதுமக்கள், காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். அதில், 21 லட்சத்து, 86 ஆயிரத்து, 961 ரூபாய் ரொக்கமும், 21 கிராம் தங்கமும், 74.600 கிராம் வெள்ளியும் இருந்தது கணக்கிடப்பட்டது. அவற்றை, கோவில் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இப்பணியில், கோவில் செயல் அலுவலர் கிருஷ்ணன், வங்கி அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !