பெருமாள் கோயில் தேருக்கு ரூ.2.40 லட்சத்தில் கூடாரம்!
வடமதுரை: வடமதுரை சவுந்தர ராஜப்பெருமாள் கோயிலின் புதிய தேருக்கு ரூ.2.40 லட்சத்தில் கூடாரம் அமைக்கப்படுகிறது. இக்கோயிலில் ஆடி மாதத்தில் 13 நாட்கள் நடக்கும் திருவிழாவில் தேரோட்டம் பிரசித்தி பெற்றது. 2014 திருவிழா வரை பயன்பாட்டில் இருந்த தேர் 70 ஆண்டுகள் பழமையானது. இதனால் உள்ளூர் பிரமுகர்கள் முயற்சியில், பொதுமக்கள் பங்களிப்புடன் இரும்பு தாமிரம் அச்சில், தேக்கு, இலுப்பை, நாவல் மர ங்களை கொண்டு புதிய தேர் உருவாக்கப்பட்டது. ஜூலை 20ல் வெள்ளோட்டமும், ஜூலை 31ல் திருவிழா தேராட்டமும் நடந்தது. முன்னதாக தேர் நிற்குமிடம் பலமான கான்கிரீட் கட்டுமானமாக மாற்றப்பட்டது. தற்போது வெயில், மழையால் பாதிப்பு ஏற்படாதபடி உயரமான கூடார அமைப்பு நிறுவும் பணி ரூ.2.40 லட்சம் செலவில் நடந்து வருகிறது. மேற்கூரை மற்றும் 4 பக்கங்களிலும் இரும்பு ஸ்டீல் தகடுகள் கொண்டு அடைக்கப் படுகிறது. ஒவ்வொரு திருவிழாவின்போதும், இவற்றின் பெரும்பகுதி கழற்றிவிட்டு, தேரோட்டம் முடிந்ததும் மீண்டும் பொருத்தும் வகையில் நிறுவப்படுகிறது.