திருப்பரங்குன்றம் கோயில் கல் திட்டுகளில் தீபம் ஏற்ற தடை!
திருப்பரங்குன்றம்:தினமலர் செய்தி எதிரொலியாக, திருப்பரங்குன்றம் கோயிலுக்குள் கல் திட்டுகளில் தீபம் ஏற்றுவதை பக்தர்கள் தவிர்த்துள்ளனர். திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குள் ஆறுகால் பீட மண்டபத்தின் கீழ் பகுதி கல் திட்டுகளிலும் மற்றும் கோயிலுக்குள் பல கல் திட்டுகளிலும் பக்தர்கள் நெய், எண்ணெய் தீபங்கள் ஏற்றி வழிபட்டனர். கோயிலில் ஜூன் 6ல் நடந்த கும்பாபிஷேகத்திற்காக, பல லட்சம் ரூபாயில், அனைத்து பகுதிகளும் தூய்மைப்படுத்தப்பட்டன. சில நாட்கள் கல் திட்டுகள் பளபளவென இருந்தது. அதன்பின் பக்தர்கள் தீபம் ஏற்றியதால், எண்ணெய் வழிந்து, திட்டுகள் சேதமடைந்தன. இதுகுறித்து தினமலர் செய்தி வெளியிட்டது. செய்தியின் எதிரொலியாக, ஆறுகால் பீடத்தின் அடிப்பகுதி கல் திட்டுகளில் தீபம் ஏற்ற தடை விதிக்கப் பட்டுள்ளது. திருவாட்சி மண்டபத்தின் நுழைவு பகுதியில் தீபம் ஏற்ற வைக்கப்பட்டுள்ள, இரும்பு ஸ்டாண்டில் பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபடுகின்றனர்.