நவராத்திரி பிரமோற்சவம்: தென்திருப்பதியில் துவக்கம்!
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகேவுள்ள தென்திருமலை தென்திருப்பதி வேங்கடேஸ்வர சுவாமி வாரி கோவிலில், நவராத்திரி பிர மோற்சவம் விழா துவங்கியது. கோவிலில் ஒன்பது படி நிலை அமைத்து, அதில் நுாற்றுக்கணக்கான சுவாமி சிலைகள், பக்தர்களின் கொலு பொம்மைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய மூன்று அம்மன் சிலைகள் மையமாக வைத்து, அதைச் சுற்றியும், கிருஷ்ணரின் , 10 அவதாரங்களின் உருவ பொம்மைகள், பாற்கடலில் அமுது கடைவது போன்றும், வெண்ணெய் திருடும் கண்ணன் பொம்மைகளும் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. நவராத்திரியை முன்னிட்டு இன்று காலை, 8:30 க்கு சின்ன சேஷ வாகனம், மாலையில் அன்னபட்சி வாகனம், 16ம் தேதி காலையில் சிம்ம வாகனம், மாலையில் முத்துப்பந்தல், 17 காலையில் கல்ப விருட்ச வாகனம், 18ம் தேதி காலை ஸ்ரீவில்லி புத்துார் ஆண்டாள் மாலை சமர்ப்பித்தல், மலையப்ப சுவாமி மோகினி திருக்கோலம், மாலையில் கருடசேவை நடக்க உள்ளது. திங்கள் கிழமை காலை அனுமந்த வாகனம், மாலையில் தங்க ரதமும், யானை வாகனம், 20 காலையில் சூர்ய பிரபை வாகனம், மாலையில் சந்திர பிரபை வாகனம் ஆகிய வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடைபெறும். புதன் கிழமை, 21ம் தேதி காலையில் தேரோட்டமும், மாலையில் குதிரை வாகனத்தில் சுவாமி திருவீதி உலாவும் நடக்கின்றன.