சரஸ்வதி, ஆயுத பூஜை கோவில்களில் சிறப்பு வழிபாடு!
கோவை: சரஸ்வதி பூஜையை முன்னிட்டு பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடு நேற்று நடந்தது. தமிழகம் முழுவதும் நேற்று சரஸ்வதி, ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது. கோவை அழகேசன் ரோட்டிலுள்ள தண்டு மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந் தது. அம்மன் விஷ்ணு துர்க்கை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பழங்கள் மற்றும் எலுமிச்சை மாலை அணிவிக்கப்பட்டு, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். கோவை ஈச்சனாரி விநாயகர் கோவிலில் விநாயகருக்கு குங்கும அலங்காரம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. ஈச்சனாரி மகாலட்சுமி கோவிலில், சரஸ்வதி, லட்சுமி, துர்க்கைக்கு சிறப்பு அலங்காரம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. மூன்று தேவியருக்கும் வெள்ளிக் கவசம் சார்த்தப்பட்டு, பட்டாடைகள் அணிவிக்கப்பட்டிருந்தது. அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகளும் மேற்கொள்ளப்பட்டன. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அம்மனுக்கு கரும்பு, பொங்கல், பழங்கள் உள்ளிட்ட நைவேத்தியங்கள் படைக்கப்பட்டன. ஆர்.எஸ்.புரம் காமாட்சிய ம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடுகளும், அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும் மேற்கொள்ளப்பட்டிருந்தது.