திருவாரூர் அருகே தங்க காசுகள் கண்டெடுப்பு!
திருவாரூர்: திருவாரூர் அருகே, விவசாய நிலத்தில் கண்டெடுத்த தங்க காசு மற்றும் 22 கிராம் தங்க தகடை வருவாய் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திருவாரூர் அருகே, அம்மையப்பன் அடுத்த பாம்பாக்கை கிராமத்தில், திருவாரூரைச் சேர்ந்த ஒருவர் புதிதாக வீட்டு மனை அமைத்து, சாலை போடும் பணியை மேற்கொண்டுள்ளார். அப்பகுதியில், நேற்று முன்தினம், அதே ஊரைச் சேர்ந்த செல்லப்பா,70,என்பவர், மாடு மேய்த்தபோது, அங்கு, உடைந்த நிலையில் ஒரு மண் உண்டியலை கண்டெடுத்தார். அதிலிருந்த தங்க காசுகளை வீட்டிற்கு எடுத்து சென்றுவிட்டார். இதையறிந்த, அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் அபிராமி, குடவாசல் தாசில்தாருக்கு தகவல் கொடுத்தார். தாசில்தார் சொக்கநாதன், கொரடாச்சேரி போலீசார் செல்லப்பாவிடம் விசாரித்ததில், மண் உண்டியலில் இருந்து தங்க காசுகள் எடுத்ததை ஒப்புக் கொண்டார். வருவாய் துறையினர், செல்லப்பாவிடம் இருந்து, 140 தங்க காசுகள், 22 கிராம் எடை கொண்ட தங்க தகடு ஆகியவற்றை கைப்பற்றினர். இதன் மதிப்பு ரூ.2.50 லட்சம் ஆகும். தங்க காசுகள் ஒவ்வொன்றும் அரை கிராம் எடை உடையவை. நேற்று, அப்பகுதியில் மேலும் தங்க காசுகள் புதைந்துள்ளதா என, வருவாய் துறையினர் பொக்லைன் இயந்திரம் மூலம் தோண்டி பார்த்தனர்; ஏதும் கிடைக்கவில்லை.