ஈரமாசி எத்தையம்மன் கோவில் கும்பாபிஷேகம்
குன்னுார்: குன்னுார் மல்லிக்கொரை கிராமத்தில், ஈரமாசி எத்தையம்மன் கோவிலில், மகா கும்பாபிஷேக விழா விமரிசையாக நடந்தது. குன்னுார் அருகே மல்லிக்கொரை கிராமத்தில், செல்வ விநாயகர், ஈரமாசி எத்தையம்மன், நவகிரக நாயகர்கள் கோவில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. கோவிலின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகத்தை ஒட்டி, முதல் நாள் புனித கங்கை நீர் கொண்டு வருதல், கலச கும்ப பிரதிஷ்டை, முதல் கால யாக பூஜை, விக்ரக பிரதிஷ்டை, மருந்து சார்த்துதல் ஆகியவை நடந்தன. தொடர்ந்து, 2ம் நாளில், இரண்டாம் கால யாக பூஜை, கும்பாபிஷேகம் நடந்தது. பிக்கட்டி சற்குரு நாத மகா முனிவர் ராஜயோக மடாலய தலைவர் சுப்ரமணியசாமி தலைமை வகித்தார். ஊர் பெரியவர்கள் ஜோகி, மணி, ஹாரி முன்னிலை வகித்தனர். பின்னர், அபிஷேக ஆராதனை, பஜனை ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடந்தன. பல்வேறு கிராமங்களில் இருந்தும் ஏராளமான மக்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை ஊர் தலைவர் மகாலிங்கம், ஊர் பொதுமக்கள் மேற்கொண்டனர்.