உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உத்தரகோசமங்கையில் டிச.25ல் ஆருத்ரா தரிசனம்!

உத்தரகோசமங்கையில் டிச.25ல் ஆருத்ரா தரிசனம்!

கீழக்கரை:உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயில் ஆருத்ரா தரிசன விழா டிச.17ல் காப்பு கட்டுதலுடன் துவங்குகிறது. 25ல் பச்சை மரகதகல் நடராஜரின் ஆருத்ர தரிசனம் நடக்கிறது.ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி சமேத மங்களேஸ்வரி தாயார் கோயிலில் பச்சை மரகதகல் நடராஜர் சிலை உள்ளது. ஒளி அதிர்வுகளால் பாதிக்கப்படாமல் இருக்க சிலையின் மீது சந்தன காப்பு பூசப்படுகிறது. ஆண்டுக்கு ஒருமுறை ஆருத்ரா தரிசன விழாவில் நடராஜர் சிலையின் சந்தனகாப்பு களையப்பட்டு, மீண்டும் பூசப்படும். இந்த ஆண்டு ஆருத்ரா தரிசன விழா டிச., 17ல் காப்பு கட்டுதலுடன் துவங்குகிறது. 25 காலை 9:00 மணிக்கு பச்சை மரகத நடராஜர் திருமேனியில் பூசப்பட்டிருக்கும் சந்தனக்காப்பு களையப்படும் நிகழ்ச்சி நடக்கும். காலை 11 மணிக்கு 18 வகையான அபிஷேக, ஆராதனையுடன் நடராஜருக்கு சந்தன தைலம் பூசப்படும். இரவு 10:30 மணிக்கு ஆருத்ரா மகா அபிஷேகம் நடக்கும். தொடர்ந்து கல்தேர் மண்டபத்தில் கூத்தர் பெருமான் எழுந்தருளும் நிகழ்ச்சியும், அதிகாலை 4:00 மணிக்கு அருணோதய நேரத்தில் சுவாமி திருமேனியில் சந்தனக்காப்பு பூசுதலும் நடக்கும்.ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான, தேவஸ்தான நிர்வாகத்தினர் செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !