உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காடையீஸ்வரர் கோவிலில் மரக்கன்று நடவு

காடையீஸ்வரர் கோவிலில் மரக்கன்று நடவு

திருப்பூர் : "வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தில், காங்கயம், ஸ்ரீகாடையீஸ்வரர் பங்கயற்செல்வி கோவில் வளாகத்தில், 1,500 மரக்கன்று நடும் விழா நேற்று நடந்தது. இயற்கையை கடவுளாக முன்னோர் வழிபட்டனர். வாழும் கிராமங்கள் மட்டுமன்றி, வழிபடும் கோவில்களில் தல விருட்சங்களாகவும், மரங்கள் சூழ்ந்த வளாகமாகவும் வைத்திருந்தனர். குன்றுகள், மலைகளில் சுவாமியை பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். பசுமை சூழ்ந்த வாழ்க்கை வாழ்ந்த மனித இனம், நாளடைவில் தொழில் வளர்ச்சி, மரங்கள் மீதான அலட்சியம் போன்ற காரணங்களால், வனங்களையும், மரங்களையும் அழித்தது.அதனால், சுற்றுச்சூழல் பாதிப்பு, மழைப்பொழிவு குறைவு, பூமி வெப்பமயமாதல், சீதோஷ்ண நிலை மாற்றம், காற்றில் நச்சு வாயுக்கள் அதிகரிப்பு என, பல சிக்கல்களை சந்தித்து வருகிறோம். வாழும் தலைமுறைக்கும், எதிர்கால சந்ததிக்கும் தூய காற்று, மழை கிடைக்க, மரங்கள் வளர்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

மாநிலத்தின் மற்ற பகுதிகளில் வட கிழக்கு பருவ மழை இயல்பை விட அதிகமான அளவும், அபரிமிதமான அளவும் பெய்து வரும் நிலையில், திருப்பூர் மழை மறைவு பிரதேசமாக மாறியுள்ளது. மாநிலத்திலேயே, வட கிழக்கு பருவ மழை இயல்பை விட குறைவாக பெய்த மாவட்டமாக உள்ளது. அபரிமிதமான வாகன பெருக்கம், தொழிற்சாலைகளால், காற்று மாசும் அதிகரித்துள்ளது. காற்றில் கலந்துள்ள நுண் துகள்கள் அதிகரித்து, சுவாசிக்க தகுதியற்றதாக மாறி வருகிறது. மழைப்பொழிவு குறைந்ததால், நீர் நிலைகளும், சாக்கடை, சாயக்கழிவு நீர் செல்பவையாக மாறி, சுகாதாரக்கேடு ஏற்படுத்தி வருகிறது. எனவே, மற்ற பகுதிகளை ஒப்பிடும்போது, மரங்கள் வளர்ப்பு, நமது மாவட்டத்துக்கு மிகவும் அவசியமானதாக உள்ளது. அதனால், நம் மாவட்டத்தை பசுமையாக்கும் வகையில், "வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தில் இணைந்து, காங்கயம் "வேர்கள் அமைப்பு, மரக்கன்று நட்டு, பராமரிக்கும் பணியை தொடர்ந்து செய்து வருகிறது. காங்கயம் பாளையம் கிராமத்தில் உள்ள இளைஞர்கள் இணைந்து, தங்கள் கிராமத்தை பசுமையாக்கி உள்ளனர். அதைத்தொடர்ந்து, பாப்பினி, சிவன்மலை, தளிஞ்சி காட்டு புதூர் கிராமங்களிலும், காங்கயம் நகர பகுதிகளிலும் மரக்கன்று நட்டு வருகின்றனர். பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் என, 70 பேர் இந்த அமைப்பில் இணைந்து, களப்பணியாற்றி வருகின்றனர்.

வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் மரக்கன்று நடும் பணியையும், மாலை மற்றும் இரவு நேரங்களில், தண்ணீர் விடும் பணியையும் மேற்கொள்கின்றனர். இதுவரை, 10 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு, பராமரித்து வருகின்றனர். நேற்று, காடையூர், காடையீஸ்வரர் பங்கயற்செல்வி கோவில் வளாகத்தில் மரக்கன்று நடும் விழா நடந்தது. "வேர்கள் அமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் வெங்கடேஷ், முருகானந்தம், சங்கர் கோபால், கார்த்திக், தாமோதரன், காங்கயம் ரோட்டரி தலைவர் பழனிசாமி, வனவர் செல்வராஜ், "வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தை சேர்ந்த ஈஸ்வரன், துரை, மகேந்திரன் மற்றும் "டிரீம் 20 அமைப்பு நந்தகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கோவிலுக்கு சொந்தமான, 42 ஏக்கர் நிலத்தில், அரசு, ஆலமரம், வேம்பு. இலுப்பை, மரமல்லி, தூங்கு வாகை, சரங்கொன்றை, சீனி புளியமரம், எலந்தை, குடை வேலன் உள்ளிட்ட, 1,500 மரக்கன்றுகள் நடப்பட்டன.

உழவர் சந்தையில்...: பல்லடம் வனம் அறக்கட்டளை சார்பில், உழவர் சந்தையில், 20 மரக்கன்றுகள் நடப்பட்டன. எம்.எல்.ஏ., பரமசிவம் தலைமை வகித்தார். "கணேஸ்வர் டெக்ஸ் டைல்ஸ் கணேஷ், "பிரபாத் மில்ஸ் பொன்னுச்சாமி, அறக்கட்டளை செயலாளர் சுந்தரராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உழவர் சந்தை வளாகத்தை சுற்றிலும், வாகை, புங்கன், மா உள்ளிட்ட, 20 மரக்கன்றுகள் நடப்பட்டன. உதவி வேளாண் அலுவலர் வினோத்குமார் நன்றி கூறினார். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !