உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அச்சன்கோயில் ஆபரணப்பெட்டிக்கு தென்காசியில் வரவேற்பு

அச்சன்கோயில் ஆபரணப்பெட்டிக்கு தென்காசியில் வரவேற்பு

திருநெல்வேலி: தென்காசி வந்த அச்சன்கோவில் ஐயப்பன் திருஆபரணப் பெட்டிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.சபரிமலை ஐயப்பன், கேரளமாநிலம் அச்சன்கோயிலில் அரசராக வீற்றிருந்து, பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இங்கு ஆண்டு தோறும் சபரி சீசனில் உற்சவவிழா நடக்கும். அச்சன்கோவில் உற்சவ விழா இன்று காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இத்திருவிழாவில் ஐயப்பன், கருப்பனுக்கு திரு ஆபரணங்கள் அணிவிக்கப்படும். இதற்கான ஆபரணங்கள் அடங்கிய பெட்டி கேரள மாநிலம், புனலூர் அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளது. அது பலத்த பாதுகாப்புடன் அச்சன்கோவில், ஐயப்பன் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. புனலுார், அச்சன்கோயில் ஆகியன கேரள மாநிலத்தின் வனப்பகுதிகளில் அமைந்திருப்பதால், பாதுகாப்பு கருதி, நெல்லை மாவட்ட எல்லை வழியாக கொண்டுசென்றனர்.தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் முன்பாக கொண்டுவரப்பட்ட ஆபரணப்பெட்டிக்கு பொதுமக்கள் வரவேற்பளித்தனர். ஆபரணப் பெட்டியில் ஐயப்பனின் தலை, முகம், மார்பு, கைகள், கால்கள், கவசம், வாள் உள்ளிட்ட ஆபரணங்கள் உள்ளன. ஆபரணப்பெட்டி கொண்டு செல்லப்பட்ட வாகனத்தின் முன்பாகவும், தொடர்ந்தும் போலீசார் பாதுகாப்பிற்கு உடன் வந்தனர். அச்சன்கோயிலில் இன்று கொடியேற்றத்துடன் விழா துவங்குகிறது. 25ம் தேதி தேரோட்டமும், 26ம் தேதி ஆராட்டுவிழாவும் நடக்கிறது. 27ம் தேதி உற்சவ விழாநிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !