ஏகாதசி எப்படி உருவானது?
சந்திரவதி என்ற நகரத்தில் ஜங்காசுரன் என்ற (முரன்) அவனுடைய மகன் மருவாசுரனும் தேவர்களை துன்புறுத்தி வந்தனர். இதனால் விஷ்ணுபகவானிடம் தேவர்கள், அசுரர்களால் தாங்கள் படும் துன்பத்தை எடுத்துரைத்தார்கள். இதனால் மகாவிஷ்ணு, அந்த அசுரர்களுடன் போர் புரிந்தார். இந்த போர் பல வருடங்கள் தொடர்ந்து நடந்துக் கொண்டே இருந்தது. இதனால் சோர்வடைந்த ஸ்ரீமந் நாராயணன், ஒரு குகையில் நன்றாக உறங்கினார். அப்போது அவர் உடலில் இருந்து ஒரு பெண் சக்தி தோன்றி, போர் நடக்கும் களத்திற்கு சென்று, அந்த அசுரர்களை வீழ்த்திவிட்டு மீண்டும் ஸ்ரீமகாவிஷ்ணுவிடமே திரும்பி வந்தது.
தன் எதிரில் ஒரு பெண் தேவதை நிற்பதை கண்டு அந்த தேவதை தன் உடலில் இருந்து வெளிப்பட்டது என்பதையும் உணர்ந்து, அந்த தேவதை அசுரர்களை அழித்ததையும் தெரிந்து, அதனை வாழ்த்தி, “ஏகாதசி” என்று பெயர் சூட்டினார். “நீ தோன்றிய இந்த நாளில், யார் என்னை நினைத்து விரதம் இருக்கிறார்களோ அவர்களுக்கு நீ துணை இரு. பக்தர்களின் வாழ்க்கையில் சகல நன்மைகளையும் அருள வேண்டும்.” என்று ஆசி வழங்கி, பிறகு அந்த ஏகாதசியை மீண்டும் தன்னுள் ஐக்கியபடுத்திக்கொண்டார் ஸ்ரீமந் நாராயணன்.