உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / டிச.27ல் மண்டலபூஜை: தங்க அங்கி நாளை புறப்பாடு!

டிச.27ல் மண்டலபூஜை: தங்க அங்கி நாளை புறப்பாடு!

சபரிமலை: சபரிமலையில் டிச.,27-ல் மண்டலபூஜை நடைபெறுகிறது. இதையொட்டி, ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து, தங்க அங்கி பவனி நாளை புறப்படுகிறது. சபரிமலையில் இந்த ஆண்டு மண்டலபூஜை 27-ம் தேதி நடைபெறுகிறது. கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் தொடர்ச்சியாக 41 நாட்கள் நடைபெறும் பூஜைகளின் நிறைவு பூஜை தான் மண்டலபூஜை. இந்த நாளில் ஐயப்பனின் விக்ரகத்தில் அணிவிக்க திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் மகாராஜா 1973-ல் தங்க அங்கியை காணிக்கையாக வழங்கினார். இது மண்டலபூஜைக்கு முந்தைய நாளிலும், மண்டலபூஜை நாளிலும் ஐயப்பன் விக்ரகத்தில் அணிவிக்கப்பட்டிருக்கும். பத்தணந்திட்டை மாவட்டம் ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் வைக்கப்பட்டுள்ள இந்த அங்கி, ஒவ்வொரு ஆண்டும் மண்டலபூஜைக்கு நான்கு நாட்கள் முன்னதாக பவனியாக எடுத்து வரப்படுகிறது.

சபரிமலை மாதிரியில் வடிவமைக்கப்பட்ட ரதத்தில் அங்கி வைக்கப்பட்டு, வழிநெடுகிலும் பக்தர்களின் வரவேற்பை பெற்று வருகிறது. நாளை காலை ஆறு மணிக்கு ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலிலிருந்து இந்த பவனி பலத்த பாதுகாப்புடன் புறப்படுகிறது. நாளை ஓமல்லுார் பகவதி கோயிலிலும், 24-ம் தேதி கோந்நி முருங்கமங்கலம் கோயிலிலும், 25-ம் தேதி பெருநாடு சாஸ்தா கோயிலிலும் தங்கும் இந்த பவனி 26-ம் தேதி மதியம் பம்பை வந்தடையும். பம்பை கணபதி கோயில் அருகில் பக்தர்கள் தரிசனத்திற்காக வைக்கப்படும் இந்த அங்கி மாலை மூன்று மணிக்கு தலைச்சுமையாக சன்னிதானத்துக்கு கொண்டுவரப்படும்.

டிச.26 மாலை 6.30 மணிக்கு தங்கஅங்கி சார்த்தி தீபாராதனை நடைபெறும். 27-ம் தேதி மண்டலபூஜை நேரத்திலும் ஐயப்பனுக்கு இந்த அங்கி அணிவிக்கப்பட்டிருக்கும். தங்கஅங்கி பவனிக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. டிச.,27 இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்பட்ட பின், மகர விளக்கு கால பூஜைக்காக 30-ம் தேதி மாலை 5.30-க்கு நடை திறக்கும். அன்று வேறு எந்த பூஜைகளும் நடைபெறாது.டிச. 31 அன்று அதிகாலை மூன்று மணிக்கு நடை திறந்து நெய்யபிஷேகம் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !