காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் சிலை பிரச்னை விஸ்வரூபம்!
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், புதிய சிலை செய்வது தொடர்பான பிரச்னை, விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இதுகுறித்து, நேற்று நடந்த, மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டத்தில், புகார் அளிக்கப்பட்டு உள்ளது.காஞ்சிபுரத்தில், 108 சிவாலயங்கள், 18 விஷ்ணு கோவில்கள் உள்ளன. அவற்றில், புகழ் பெற்றது ஏகாம்பரநாதர் கோவில். இது பஞ்ச பூத ஸ்தலங்களில், ப்ருத்வி (மண்) ஸ்தலமாகும். இக்கோவிலின் மூலவர், மணல் லிங்கம். எனவே, மூலவருக்கு அபிஷேகம் கிடையாது. உற்சவருக்கு மட்டுமே அபிஷேகம் நடைபெறும். அந்த உற்சவர் சிலை மிகவும் பழமையானது; 75 சதவீதம் தங்கத்தால் உருவாக்கப்பட்டது என, கூறப்படுகிறது.
பக்தர்கள் அதிருப்தி:கடந்த பங்குனி பிரம்மோற்சவத்தின் போது, சுவாமி வீதியுலா நடந்தது. அதன்பின், உற்சவர் சிலை பழுதடைந்ததாகக் கூறி, சிலையை மாற்றும்படி, அர்ச்சகர்கள் சார்பில், கோவில் நிர்வாகத்திடம் மனு அளிக்கப்பட்டது. பழுதை காரணம் காட்டி, கடந்த ஜூலை, வசந்த உற்சவம் நடைபெறவில்லை. ஆனால், உற்சவருக்கு தினமும் வழக்கமான அபிஷேகங்கள் நடக்கின்றன.சிலை பழுது எனக் கூறி, உற்சவம் நடைபெறாமல் இருப்பது, பக்தர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, இந்து சமய அறநிலையத் துறையின் தலைமை ஸ்தபதி முத்தையா, கோவிலில் ஆய்வு செய்தார். புதிய சிலை செய்ய, ஏகாம்பரநாதர் கோவில் நிர்வாகத்திற்கு, இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். சேதமடைந்த பழைய உற்சவர் சிலைக்கு, தங்க கவசம் செய்ய கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதற்கு தேவையான, 2.4 கிலோ தங்கமும்; 85 ஆயிரம் ரூபாய் செய்கூலியும், உபயதாரர்கள் செலவில் மட்டுமே செய்ய வேண்டும்; கோவிலின் தங்கத்தை பயன்படுத்த கூடாது என, கோவில் நிர்வாகத்திற்கு ஆணையர் உத்தரவிட்டார்.இந்நிலையில், பழைய சிலை செய்வது தொடர்பான பணிகளை மேற்கொண்டால், போராட்டம் நடத்தப் போவதாக, முன்னாள் அறங்காவலர் குழு உறுப்பினர் ரகு தெரிவித்திருந்தார்.
கயிறு கட்டியதால்... இதை தொடர்ந்து, காஞ்சி புரம் நகர மக்கள் சார்பாக, நேற்று மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சவுரிராஜனிடம், அண்ணாமலை என்பவர், புதிய சிலை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மனு அளித்துள்ளார். அண்ணாமலை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:பழமையான உற்சவர் சிலையை, மாற்றக்கூடாது, அதை புனரமைக்க வேண்டும் என, அரசுக்கும், இந்து சமய அறநிலையத் துறை ஆணையருக்கும் மனுக்கள் அனுப்பிஉள்ளோம். தலைமை ஸ்தபதி முத்தையா, 3,000 ஆண்டுகள் பழமையான இந்த சிலையை போல், யாராலும் வேறொரு சிலையை செய்ய முடியாது என்றும், இதை புனரமைத்தால், இன்னும் 1,000 ஆண்டுகள் பயன்படுத்தலாம் என்றும், அறிக்கையில் தெரிவித்திருந்தார். மேலும், உற்சவ நேரங்களில், மிக கனமான வெள்ளி கவசங்களை இரு பக்கமும் வைத்து கயிறு கொண்டு உற்சவர் சிலையை கட்டியதால்தான் சிலை உடைந்தது என்றும் கூறியிருந்தார். இந்நிலையில், தலைமை ஸ்தபதி, அபூர்வமான சிலை இது என கூறியும்; ரகசியமாக சிலையை மெழுகில் அச்சு எடுத்துள்ளனர். அதிகாரிகள் பார்வையில், கோவிலில் வைத்து சிலையை செய்யாமல், வேறு எங்கோ வைத்து செய்வது முறைகேடுகளுக்கு வழிவகுக்கும்.பல கோடி பக்தர்களின் மனம் புண்படும் வகையில், புதிய சிலையை செய்யாமல்; பழைய சிலையை புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ஏகாம்பரநாதர் கோவில் செயல் அலுவலர் முருகேசன் கூறுகையில், புதிய சிலை செய்வதற்கான பணிகள் இன்னும் துவங்கவில்லை. கோவிலில் தான் புதிய சிலை செய்யப்படும். அனைவருக்கும் தெரிவிக்கப்பட்ட பிறகே சிலை செய்வதற்கான பணிகள் துவங்கும், என்றார். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் உற்சவர் சிலை, மிகவும் பழமையானது. பாரம்பரியம்மிக்க அந்த சிலையை மாற்றுவதை, பக்தர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மக்கள் குறைதீர் கூட்டத்தில், மனு அளித்துள்ளேன். தமிழகத்தில் பல கோவில்களில் உள்ள உற்சவர் சிலைகள், இந்த சிலையைவிட, மிகவும் அதிகமாக பழுதடைந்துள்ளன. அவ்வாறு உள்ள பல சிலைகள் பூஜிக்கப்படும் போது, இங்கு புதிய சிலை அமைப்பது, பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.எஸ்.அண்ணாமலை, சிவபக்தர்.