உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாலாபிேஷகத்தில் குளிரும் ஆல்கொண்டமாலன்!

பாலாபிேஷகத்தில் குளிரும் ஆல்கொண்டமாலன்!

உடுமலை:  திருப்பூர் மற்றும் கோவை மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து, பல்லாயிரக்கணக்கான விவசாயிகள், பசுக்கள் மற்றும் எருமைகள் மூலம் கிடைக்கும் பாலை, கோவிலுக்கு கொண்டு வந்து, ஆல்கொண்டமாலுக்கு அபிேஷகம் செய்கின்றனர்.கோவிலில் வழங்கப்படும் தீர்த்தத்தை, கால் நடைகளுக்கு தெளித்தும், திருநீர் பூசியும், துளசியை கால்நடைகளுக்கு உட்கொள்ள கொடுத்தும், அவற்றை நோய்களில் இருந்து பாதுகாத்து வருகின்றனர்.  கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்கள் நீங்க, வேண்டிக்கொள்ளும் விவசாயிகள், நேர்த்திக்கடனாக மாடு, ஆடு, நாய் உள்ளிட்ட உருவாரங்களை வைத்து வழிபடுகின்றனர்.  திருவிழாவின் போது, சுற்றுப்புற கிராமங்களில் உள்ள விவசாயிகள் மாட்டு வண்டிகளில் தங்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் வந்து, ஆல்கொண்டமாலை வழிபட்டு செல்கின்றனர்.

அபிேஷகமும், அலங்காரமும்:
ஆல்கொண்டமாலுக்கு அவல், பால், பொங்கல் ஆகியவை வைத்து வழிபாடு செய்யப்படுகிறது. திருவிழா காலங்களில், அர்த்தநாரி அபிேஷகம் எனப்படும் பால், தயிர், நெய், திருமஞ்சனம், மஞ்சள், சந்தனம், குங்குமம், விபூதி, இளநீர், பன்னீர், தேன், எலுமிச்சை சாறு, பஞ்சாமிர்தம், வெட்டிவேர், ஜவ்வாது, புணுகு, கரும்பு சர்க்கரை ஆகியவற்றால் அபிேஷகம் செய்யப்படுகிறது. தொடர்ந்து பெருமாளுக்கு உகந்த திருத்துலாய் மாலை எனப்படும் துளசி, வஸ்திரம் அணிவிக்கப்படுகிறது. துளசியால் ஒவ்வொரு முறையும் அர்ச்சனை செய்யப்படுகிறது. கோவிலில் தினமும், மூன்று கால பூஜைகள் நடக்கிறது. காலையில் பால், பழம் கொண்டும், மதியம் சர்க்கரை பொங்கல், தேங்காய், பழம் கொண்டும், இரவு பழம் தீபாராதனையும் செய்யப்படுகிறது.

மார்கழி சிறப்பு:  மார்கழி மாதம் முழுவதும் பெருமாளுக்கு உகந்த மாதமாக இருப்பதால், ஆல்கொண்டமால் கோவிலிலும் மார்கழி மாத விழா சிறப்பாக நடத்தப்படுகிறது. மார்கழி மாதம் முழுவதும் காலை, 5:00 முதல், 8:00 மணி வரை, சிறப்பு பூஜைகளும், பஜனையும் நடக்கிறது.

இசைக்கு வசமாகும் சலங்கை மாடுகள்: ஆல்கொண்டமாலுக்கு காணிக்கையாக செலுத்தப்படும் கன்றுகளை, ‘சலங்கை மாடு’ என்கின்றனர். இவை ஆல்கொண்டமாலுக்கு சொந்தமானவை என்பதற்கு அடையாளமாக, இந்த கால்நடைகளின் காதுகளை சூலாயுதம் போல் வெட்டி விட்டு, விலாப்புறத்திலும் சூலாயுதம் முத்திரை பதிக்கின்றனர்; திருவிழாவின் போது, கோவிலில் விட்டுச் செல்கின்றனர். இக்கன்றுகள் கோவில் வளாகத்தில் சுதந்திரமாக சுற்றி திரியும். கட்டளைகளை புரிந்து கொண்டு, தமிழனின் பாரம்பரிய இசையான தாரை, தப்பட்டை, உருமி இசைக்கு ஏற்ப ஆடுவது சிறப்பம்சமாகும். திருவிழாவின்போது, நுாற்றுக்கணக்கான கிராமங்களை சேர்ந்த மக்கள், இக்கோவிலுக்கு வருகின்றனர். ஒரு சில கிராமத்தை சேர்ந்தவர்கள் ஒயிலாட்டம், உருமி ஆட்டம், தேவராட்டம் ஆடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !