உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியகோயில் மகரசங்கராந்திப் பெருவிழா 2 டன் கிலோ காய்,கனி அலங்காரத்தில் நந்தி!

பெரியகோயில் மகரசங்கராந்திப் பெருவிழா 2 டன் கிலோ காய்,கனி அலங்காரத்தில் நந்தி!

தஞ்சாவூர்: தஞ்சை பெரியகோயில், மகரசங்காரந்திப் பெருவிழாவை முன்னிட்டு இரண்டாயிரம் கிலோவில் ஆன காய், பழங்கள் வகையில் நந்தி பெருமானுக்கு சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு வழிப்பாடும், 108 பசுமாடுகள் கோ பூஜையும் நடத்தப்பட்டன.

உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரியகோவிலில் மிகப்பெரிய நந்திபெருமான் சிலை உள்ளது. இந்த நந்தி பெருமானுக்கு மகரசங்கராந்தி பெருவிழா பொங்கல் பண்டிகை (ஜன.,15) தொடங்கியது. இதையொட்டி (ஜன.,15) மாலை சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது.

மாட்டு பொங்கலான (ஜன.,16) காலை சவ்சவ், உருளை கிழங்கு, கத்தரிக்காய், முட்டைகோஸ், பூசணிக்காய், வாழைக்காய், பாகற்காய், கேரட், மிளகாய், நெல்லிக்காய் போன்ற பல்வேறு வகையான காய்கறிகளாலும், ஆரஞ்சு பழம், வாழைப்பழம், ஆப்பிள், மாதுளை, கொய்யா போன்ற பலவகையான பழங்களாலும், முறுக்கு மற்றும் பல்வேறு வகையான இனிப்புகளாலும், மலர்களாலும் நந்திபெருமானுக்கு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. மொத்தம் 2 டன் காய்கறிகள், மலர்கள், இனிப்புகள், பழங்களால் நந்திபெருமானுக்கு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

மேலும், 108 பசுக்களுக்கு பூஜை நடைபெற்றது. நந்திபெருமான் சிலை முன்பு பசுமாடுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு, மாடுகள் மீது சந்தனம், குங்குமம் பூசப்பட்டு, மாலை அணிவிக்கப்பட்டு, பட்டுதுணி போர்த்தப்பட்டு வழிபாடு நடைபெற்றது. மேலும் மாடுகளுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் நந்திபெருமானுக்கு படைக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள், இனிப்புகள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !