உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்!

வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்!

ஆலயங்கள் ஒரு சமயத்தில் அழியாச் சின்னங்களாகவும், அன்றாட மக்கள் வாழ்க்கை நெறியை வழிபடுத்திச் செல்வதாக இருந்தன.

இதற்கு சான்றாக, புதுச்சேரி ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் அமைந்திருந்தது, தேடி வரும்
பக்தர்களை காக்கும் கடவுளாக இக்கோவில் பெருமாள் விளங்கியதோடு, ஆபத்து காலங்களில்
பிற கோவில்களின் சுவாமி விக்ரகங்களை பாதுகாத்த பெருமையும், இக்கோவிலுக்கு உண்டு.

தல வரலாறு:
கோவில் அமைந்துள்ள இடம் முன்பு அரச மரங்கள் சூழ்ந்த காடாக இருந்தது. அங்கு, ஸ்ரீ நரசிங்க பெருமானை ஆராதனை மூர்த்தியாக கொண்டு, சிறிய கோவில் எழுப்பி, மக்கள் வழிபட்டனர். பின், அடியார்களின் முயற்சியால், இக்கோவில் படிப்படியாக பெருங்கோவிலாக உருவெடுத்தது. ஸ்ரீவரதராஜ பெருமாள் மூல மூர்த்தியாக பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

கோவில் உருவானபோது, முதன் முதலாக பொது மக்களால் வணங்கப்பட்ட நரசிங்க பெருமாள் விக்ரகம், வரதராஜ பெருமாள் சன்னதியின் சுற்றுப்பிரகாரத்தில், மேற்கு திசை நோக்கிய இடத்தில் உள்ளது.

சிலைகளை காத்த பெருமாள்: புதுச்சேரியில் 1748ம் ஆண்டு செப்., 8 ம் தேதி, வேதபுரீஸ்வர் கோவில் பிரெஞ்சுக்காரர்களால் அழிக்கப்பட்டதாகவும், அப்போது, இடிபாடுகளுக்கிடையே இருந்த சுவாமி விக்ரகங்கள், பூஜை பொருட்களை, ஆனந்தரங்கப் பிள்ளை என்பவர் மீட்டு, வரதராஜ பெருாள் கோவிலில் வைத்து பாதுகாத்ததாக, அவரது நாட்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும், தென்னாட்டில் முஸ்லிம்கள் படையெடுப்பின் போது, பல்வேறு இந்து கோவில்கள்
இடிக்கப்பட்டன. அப்போது, தீவனுார், செஞ்சி உட்பட பல கோவில்களின் சுவாமி விக்ரகங்கள்,
புதுச்சேரி கொண்டு வரப்பட்டு, வரதராஜ பெருமாள் கோவிலில் வைத்து பாதுகாக்கப்பட்டதாக
வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. இதில் இருந்து, இக்கோவிலின் தொண்மையை உணர முடிகிறது. இக்கோவிலின் சம்ரோக்ஷணம் வரும் 20ம் தேதி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !