முருகு என்றால் அழகு மட்டும் தானா?
முருகன் என்ற சொல் முருகு என்ற சொல்லில் இருந்து பிறந்ததாகச் சொல்வர். முருகு என்றால் அழகு. முருகன் என்றால் அழகானவன். ஆனால், முருகு என்ற சொல்லை வேறுமாதிரியாக ஆய்வு செய்கின்றன திவகாரம், பிங்கலந்தை, நாமதீப நிகண்டு ஆகிய நுõல்கள். இந்தச் சொல்லுக்கு அழகு, பூந்தட்டு, கள், எலுமிச்சை, எழுச்சி, அகில், முருகு என்னும் வாத்தியம் ஆகிய பொருள்களும் உள்ளதாக இந்த நுõல்களில் சொல்லப்பட்டுள்ளது. பூக்கள் நிறைந்த தட்டைப் பார்த்தால் மனம் மகிழ்கிறது. கள் குடித்தால் போதை ஏற்படுகிறது. எலுமிச்சையையும், அகிலையும் முகர்ந்தால் மணக்கிறது. இவை நம்மை பரவச நிலைக்கு அழைத்துச் செல்கின்றன.இதுபோல் முருகனைக் கண்டாலும் மனம் பரவசமாகிறது. உள்ளத்தில் எழுச்சி ஏற்படுகிறது. முருகு என்ற ஒரு சொல்லுக்கு பலபொருள் இருப்பது போல, முருகனிடமும் பலவித அருள்சக்திகள் உள்ளன. இதனால் தான் அவரை முருகு என்ற சொல்லால் அழைத்தனர்.